திராவிட நிலப்பரப்பிலிருந்து அகற்றப்பட்டது பாஜக.. மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
May 13, 2023,03:52 PM IST
சென்னை: திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றியைத் தொடர்ந்து தலைவர்கள் அக்கட்சியை வாழ்த்தி வருகின்றனர். கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பையும் பாராட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:



கர்நாடகா சட்டசபைத் தேர்தல் 2023, கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள், ராகுல் காந்தி
கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். 
கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. 

பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.