ராகுல் காந்தியின் சூரத் பயணம் ஒரு "டிராமா".. சிறுபிள்ளைத்தனம்.. பாஜக பாய்ச்சல்

Su.tha Arivalagan
Apr 03, 2023,02:31 PM IST
டெல்லி: சூரத் செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்ய ராகுல் காந்தி போகத் தேவையே இல்லை. ஆனால் பெரும் திரளானவர்களை கூட்டிக் கொண்டு கோர்ட்டுக்குப் போனது ஒரு நாடகம், சிறுபிள்ளைத்தனமான செயல்.. நீதித்துறைக்கு நெருக்கடி தர முயலுகிறார்கள் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறியுள்ளார்.

சூரத் மாஜிஸ்திரேட் கோர்ட் தனக்கு அளித்த 2 ஆண்டு சிறைத் தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி சூரத் முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் இன்று ராகுல் காந்தி அப்பீல் செய்கிறார். இதை பாஜக விமர்சித்துள்ளது. ராகுல் காந்தியின் செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று பாஜக வர்ணித்துள்ளது.



இதுகுறித்து கிரண் ரிஜ்ஜு கூறுகையில், சூரத் கோர்ட்டுக்கு ராகுல் காந்தி நேரடியாக போகத் தேவையே இல்லை. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர் அப்பீல்செய்ய நேரில் போகத் தேவையில்லை. வக்கீல்களே போதுமானது. பொதுவாக யாரும் அப்படி போகவும் மாட்டார்கள்.

ஆனால் பெரும் திரளான தலைவர்களைக் கூட்டிக் கொண்டு ராகுல் காந்தி போவது ஒரு டிராமா என்பதைத் தவிர வேறு  ஒன்றும் இல்லை.  சிறுபிள்ளைத்தனமான செயல் இது. நீதித்துறைக்கு அழுத்தம் தர முயற்சிக்கிறார்கள். இதுபோன்ற தந்திரங்களை கோர்ட்டுகள் அனுமதிக்காது என்றார் ரிஜ்ஜு.

காங்கிரஸ் பதிலடி

ஆனால் பாஜகவின் இந்தப் புகாரை நிராகரித்துள்ளது காங்கிரஸ். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், நீதித்துறையை யாரும் மிரட்ட முடியாது,நெருக்கடி தரவும் முடியாது. சூரத்துக்குப் போகும் ராகுல் காந்திக்கு நாங்கள் தார்மீக ஆதரவு தருகிறோம். அதன் பொருட்டே தலைவர்கள் உடன் சென்றனர். இது பலம் காட்டும் செயல் இல்லை. நாட்டுக்காக அவர் போராடுகிறார். அவருக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்றார் கார்கே.