சட்டசபையில் அமைச்சர்களின் நடவடிக்கை அநாகரீகத்தின் உச்சம்.. பாஜக கண்டனம்

Su.tha Arivalagan
Jan 10, 2023,11:14 AM IST
சென்னை:  ஆளுநர் உரை சம்பவத்தின்போது தமிழக அமைச்சர்கள் சிலர் சட்டசபையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக தமிழ்நாடு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.



இதுதொடர்பாக கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்வீட்:

தி மு க அமைச்சர்கள் பலர் அநாகரீகத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். நேற்று சட்டசபையில் அமைச்சர் பொன்முடியின் யோக்கியதையே உலகமே வேடிக்கை பார்த்து சிரித்த நிலையில், நேற்று மாலை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், விளையாட்டு  அமைச்சர் உதயநிதி அவர்கள் நேற்றைய சட்டசபை விவகாரம் குறித்து.
முதிர்ச்சியற்ற வகையில், சிறுபிள்ளைத்தனமாக, மலிவான விமர்சனங்களை குறிப்பிட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

"தமிழ்நாடு சட்டமன்ற விதிகளில் அத்தியாயம் 4ல் குறிப்பிட்டுள்ளபடி, அரசியலமைப்பு சட்டத்தின் 175, 176ன் பிரிவின் படி, அவை கூடியிருக்கும் போது ஆளுநர் உரை நிகழ்த்துகையிலோ, நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ,உறுப்பினர் எவரும் தமது பேச்சினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கீடு செய்யவோ கூடாது, அவ்வாறு தடங்கலோ அல்லது குறுக்கீடோ செய்வது பேரவையின் ஒழுங்கிற்குப் பெருத்த ஊறு விளைவிப்பதாகக் கருதப்பெற்று அடுத்து நிகழும் கூட்டத்தில் பேரவை தலைவரால் தக்க நடவடிக்கை எடுத்து கொள்ளப்பெறும்".

இதனடிப்படையில், நடைபெற்ற சட்டசபை நிகழ்வில், ஆளுநர் உரைக்கு முன்னர் இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திக்கொண்டிருந்த போது இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திய பின்னர் குறுக்கீடு செய்து, தடங்கல் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முன் வரவேண்டும். அதுவே சட்டம்! அதுவே ஜனநாயகம்! முதலமைச்சர் மீது நடவடிக்கை பாயுமா? என்று அவர் கூறியுள்ளார்.