பரபரப்படையும் அரசியல் களம் : வெளியாகும் கணிப்புகள்.. X தளத்தை ஆக்கிரமித்த exit poll + பாஜக!

Aadmika
Jun 01, 2024,06:50 PM IST

டில்லி : ஏப்ரல் 19ம் தேதி துவங்கிய லோக்சபா தேர்தல் 2024 ஓட்டுப்பதிவுகள் இன்றுடன் (ஜூன் 01) நிறைவடைந்துள்ளன. மொத்தம் ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதிலும் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளன.


இதில் பதிவான ஓட்டுக்கள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் ஓட்டுப்பதிவுகள் முழுவதுமாக நிறைந்து விட்டதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை இன்று பல்வேறு மீடியாக்களும் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் எக்ஸ் தள டிரெண்டிங் முழுவதிலும் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஹேஷ்டேக்குகளே ஆக்கிரமித்துள்ளன.




#ExitPoll, #ElectionResults, #BJP 320, #My Prediction, NDA 370, உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டாக துவங்கி உள்ளன. நாடே லோக்சபா தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகி உள்ளது. தேர்தலில் வெல்லப் போவது யார், ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உருவாகி உள்ளது. இதனால் தேசிய அளவில் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.


எக்சிட் போல் முடிவுகளை சில கட்சிகள் இப்போதே வெற்றி பெற்று விட்டது போல கொண்டாடத் தொடங்கி விட்டன. குறிப்பாக பாஜகவினர்தான் அதீதமாக களமாடி வருகின்றனர். பாஜகவுக்கு மாபெரும் வெற்றி என்று தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி டிவீட் போட்டிருக்கிறார். இதேபோல பாஜக ஏதோ ஆட்சியைப் பிடித்து விட்டது போல எக்ஸ் தளத்தில் அக்கட்சியினர் இப்போதே கொண்டாட்டமாக டிவீட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.


பாஜகவினர் எக்சிட் போல் முடிவுகளை வைத்து அதையே பிரச்சாரமாக்க முயல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறியிருந்தன. கிட்டத்தட்ட அதுபோலதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.