சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல்... பாஜக வெற்றி..  "இது கள்ளாட்டம்".. ஆம் ஆத்மி புகார்!

Su.tha Arivalagan
Jan 30, 2024,04:12 PM IST
சண்டிகர்:  சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கும், பாஜகவுக்கும் இடையே நடந்த மோதலில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கு விழுந்த வாக்குகளில் 8 ஓட்டுக்கள், செல்லாதது என்று தேர்தல் நடத்திய அதிகாரி அறிவித்தது, பாஜகவுக்கு சாதகமாகப் போய் அக்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விட்டார்.



சண்டிகர் மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. இதில் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோங்கரும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலுக்காக ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கை கோர்த்துப் போட்டியிட்டதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 

சண்டிகர் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 13 இடங்களிலும், பாஜகவுக்கு 14 இடங்களிலும், காங்கிரஸுக்கு 7 இடங்களிலும் வெற்றி கிடைத்தது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் கை கோர்த்ததால் ஆம் ஆத்மி வேட்பாளரே வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். 

அரவிந்த் கெஜ்ரிவால் அதிருப்தி

ஆனால், இன்று நடந்த தேர்தலில் சோங்கருக்கு 16 வாக்குகள் விழுந்தன. அதாவது எதிர்த் தரப்பிலிருந்து 2 வாக்குகள் அவருக்கு வந்துள்ளன. அதேசமயம், ஆம் ஆத்மி வேட்பாளருக்கு 12வாக்குகள் கிடைத்தன. 8 வாக்குகள் செல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. அந்த எட்டு வாக்குகளும் ஆம் ஆத்மிக்கு விழுந்த வாக்குகள்தான்.  இந்த அறிவிப்பால் ஆம் ஆத்மி கட்சியினர் கொதிப்படைந்தனர். 

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், இது மோசடியான தேர்தல். பாஜக மோசடி செய்து வென்றுள்ளது. தேர்தல் நடைமுறை எங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. மேயர் தேர்தலுக்கே இவ்வளவு கீழே இறங்கிப் போகிறவர்கள், தேசிய அளவில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இது மிகவும் கவலை தருகிறது என்று கூறியுள்ளார்.