"காங்கிரஸ் மாடலுக்கு" செம டஃப்..  பாஜக கூட்டத்தில் அடிதடி.. சேர்கள்  பறந்தன.. ஃபேன்கள் கிழிந்தன!

Su.tha Arivalagan
Jan 08, 2023,11:28 AM IST

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் நடந்த பாஜக கூட்டத்தில் திடீரென பெரும் அடிதடி ஏற்பட்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர். சேர்களை தூக்கி வீசி அடித்துக் கொண்டதில் மின்விசிறிகளும் கூட சேதமடைந்து விட்டன.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில், பாஜக சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அருள் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அவரது ஆதரவாளர்களும், முன்னாள் தலைவர் பாலசுந்தரம் ஆதரவாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். சங்கராபுரம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது பாலசுந்தரம் ஆதரவாளர்களுக்கும், அருள் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது பின்னர் மோதலாக மாறியது. திடீரென இரு தரப்பும் சரமாரியாக அடித்துக் கொண்டனர்.




கைகலப்பு பின்னர் சேர்களைத் தூக்கி அடிக்கும் நிலைக்குப் போனது. சரமாரியாக கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.  சேர்கள் பறந்ததில் அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது. ரஷ்யாவிலிருந்து உக்ரைனுக்குள் ஏவுகணைகள் பறப்பது போல இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் நோக்கி சேர்களை ஒரு குரூப் வீச, பதிலுக்கு அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் சேர்கள் பறந்து வந்தன. சேர்கள் மேல் நோக்கிப் பறந்ததில் சில மின்விசிறிகள் பிய்ந்து போய் விட்டன. 


இரு தரப்பும் அடித்துக் கொண்டதில் சிலர் காயமடைந்தனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். இரு தரப்பையும் விலக்கி விட்டு நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சங்கராபுரத்தில் பாஜகவினர் இப்படி அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வழக்கமாக காங்கிரஸ் கூட்டத்தில் இதுபோல பெரிய பெரிய தாக்குதல்கள் அடிதடிகள் நடைபெறுவதுண்டு. குறிப்பாக சத்தியமூர்த்தி பவனில் இதுபோன்ற பெரும் தாக்குதல்கள் பலமுறை நடந்ததுண்டு. எல்லாக் கட்சிகளையும் விட நாங்கள் வித்தியாசமானவர்கள், ஒழுங்கு படைத்தவர்கள் என்று கூறி வரும் பாஜகவில் இப்படி ஒரு அடிதடி நடந்தது சங்கராபுரம் பகுதி மக்களிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.