வேலையே செய்யாமல்.. செந்தில் பாலாஜிக்கு சம்பளம்... குத்திக் காட்டிய அண்ணாமலை

admin
Aug 01, 2023,12:08 PM IST
ராமநாதபுரம் : ஊழல் குற்றத்திற்காக சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். திமுக.,விற்கு மக்கள் நலனில் அக்கறை கிடையாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக.,வை  விமர்சித்துள்ளார்.

2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் பாஜக.,வை பலப்படுத்துவதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாத யாத்திரை துவக்கி உள்ளார். மொத்தம் 110 நாட்கள் கொண்ட முதல் கட்ட பாதயாத்திரையை ராமநாதபுரத்தில் துவங்கி, சென்னையில் நிறைவு செய்ய உள்ளார். கடந்த நான்கு நாட்களாக ராமநாதபுரத்தில் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.



நேற்று திருவாடனை தொகுதியில் மக்களை சந்தித்த அண்ணாமலை, திறந்த ஜீப்பில் நின்ற படி மக்களிடம் பேசினார். அப்போது, ஊழல் குற்றத்திற்காக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறையில் இருந்த படியே சம்பளம் வாங்குகிறார்கள். மக்களுக்கு பணியாற்றுவதற்காக தான் அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் செந்தில் பாலாஜி எந்த வேலையும் செய்யாமலேயே சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவருக்கு சம்பளம் கொடுத்து, அவர் செய்த ஊழலை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்துகிறார் என்பதை தான் இது காட்டுகிறது. திமுக.,வினர் தங்களின் வருமானத்தை உயர்த்திக் கொள்வதில் தான் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மக்கள் நலனை பற்றி அக்கறை இல்லை என தெரிவித்துள்ளார். 

முன்னதாக பாத யாத்திரையை துவங்குவதற்கு முன் DMKFiles2 என்ற பெயரில் திமுக.,செய்த ஊழலின் இரண்டாவது பகுதியை சோஷியல் மீடியாவில் வெளியிட்டதுடன், தமிழக கவர்னரிடமும் ஊழலுக்கான ஆதாரங்களை அண்ணாமலை ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.