ராஜ்யசபாவில் பெரும்பான்மையை இழந்தது பாஜக.. அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்.. கட்சிகளுக்கு லக்கி பிரைஸ்!

Su.tha Arivalagan
Jul 15, 2024,05:42 PM IST

டெல்லி: ராஜ்யசபா எனப்படும் மாநிலங்களவையில் பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் பறி போயுள்ளதால் மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தங்கள் பக்கம் வளைத்து அவர்களது ஆதரவுடன்தான் எதையும் செய்ய முடியும் என்ற நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. 


பாஜக சார்பில் உறுப்பினர்களாக இருந்த ராகேஷ் சின்ஹா, ராம் சகல், சோனால் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகியோரது பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் பாஜகவின் பலம் ராஜ்யசபாவில் குறைந்துள்ளது. இவர்கள் நான்கு பேருமே நியமன உறுப்பினர்கள் ஆவர். இவர்களது ஓய்வால் தற்போது ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 86 ஆக குறைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 101 ஆக குறைந்துள்ளது. 




ராஜ்யசபாவில் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை 225 ஆகும். மொத்த பலம் 245 ஆகும். தற்போதைய பலத்தை வைத்துப் பார்த்தால் பெரும்பான்மைக்குத் தேவை 113 பேர் ஆகும். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே தற்போது வெறும் 101 பேர்தான் உள்ளனர் என்பதால் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இந்தியா கூட்டணிக்கு 87 எம்.பிக்கள்




மறுபக்கம் இந்தியா கூட்டணியில் மொத்தம் 87 உறுப்பினர்கள் உள்ளனர். அதிகபட்சமாக காங்கிரஸுக்கு 26, திரினமூல் காங்கிரஸுக்கு 13 எம்பிக்கள் உள்ளனர். திமுக, ஆம் ஆத்மிக்கு தலா 10 பேர் உள்ளனர். 


இதுவரை பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வந்த பிஜூ ஜனதாதளம் (9 எம்.பிக்கள் உள்ளனர்) தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை. அதற்கு ஆதரவாகவும் இல்லை. எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று அது கூறி விட்டது.  இதனால் அந்தக் கட்சியின் எம்.பிக்கள் ஆதரவையும் பாஜக இழந்துள்ளது.


இப்போது என்ன சிக்கல் என்றால் சட்ட மசோதாக்களை நிறைவேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பலம் இல்லை. பிற கட்சிகளின் ஆதரவு இருந்தால்தான் மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்ற நிலையில் பாஜக உள்ளது.


அதிமுக -ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு லக்கி பிரைஸ்




இப்போது பாஜகவின் ஆப்ஷன் அதிமுகவும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும்தான். இருவருமே முன்னாள் கூட்டாளிகள். லோக்சபா தேர்தலுக்கு முன்புதான் கூட்டணியிலிருந்து விலகியவர்கள். அதேசமயம், இவர்களின் மாநிலத்  தலைமை, தேசியத் தலைமையுடன் நல்லுறவில்தான் இருக்கிறார்கள். 


இதில் அதிமுகவிடம் 4 உறுப்பினர்கள் உள்ளனர். ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் வசம் 11 உறுப்பினர்கள் உள்ளனர். மற்றவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதை விட, இந்த இரு கட்சிகளையும் தங்களுக்கு ஆதரவாக திருப்புவது பாஜகவுக்கு எளிதானது. எனவே இவர்களின் ஆதரவை வைத்துத்தான் ராஜ்யசபாவில் நிலைமையை சமாளிக்க பாஜக முயலும் என்று தெரிகிறது.


இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சில பல நிபந்தனைகளுடன் பாஜகவுக்கு ஆதரவளிக்க முன்வரலாம். ஆனால் அதிமுக இறங்கி வருமா என்று தெரியவில்லை. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிடம் ஆட்சியைப் பறி கொடுத்த கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பெரிய வன்முறையே அங்கு தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களால் அரங்கேற்றப்பட்டது. அதற்கெல்லாம் பாஜக நிவாரணம் தேடிக் கொடுத்தால், மேற்கொண்டு நாயுடு தரப்பிலிருந்து தொல்லைகள் வராமல் இருந்தால் ஜெகன் மோகன் ரெட்டி மாநிலங்களவையில் பாஜகவை ஆதரிக்க முன்வரலாம் என்று தெரிகிறது.


ஆக, லோக்சபாவில் சந்திரபாபு நாயுடு ஆதரவு, ராஜ்யசபாவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு என பாஜகவின் நிலை விசித்திரமானதாக மாறியுள்ளது.


ராஜ்யசபாவில் 12 நியமன உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை நியமன உறுப்பினர்களாக்கியதே மோடி அரசுதான். எனவே அவர்கள் மோடி அரசுக்கே ஆதரவாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


லோக்சபாவிலும் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன்தான் அங்கு பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தற்போது ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கே பெரும்பான்மை பலம் இல்லாமல் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.