சீட் கிடைக்காததால் ஆத்திரம்.. 22 தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா.. சிக்கலில் பாஸ்வான் கட்சி.. பாஜக ஷாக்

Su.tha Arivalagan
Apr 04, 2024,08:41 AM IST

பாட்னா: பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணியில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சித் தலைவர்கள் 22 பேர் கூண்டோடு கட்சியை விட்டு விலகியுள்ளனர். இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தரப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.


தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆத்திரத்தில் இவர்கள் விலகியுள்ளனர். இவர்களில் முன்னாள் அமைச்சர் ரேணு குஷ்வாஹா,  கட்சியின் தேசிய செயலாளர் சதீஷ் குமார், மாநில ஒருங்கிணை்பாளரும் அமைச்சருமான ரவீந்திரா சிங், அஜய் குஷ்வாஹா போன்ற முக்கியத் தலைவர்கள் அடக்கம்.




இவர்கள் மொத்தமாக விலகியதால் ராம் விலாஸ் பாஸ்வான் உருவாக்கி, அவரது மகனால் நடத்தப்பட்டு வரும் லோக் ஜனசக்தி கட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து ரேணு குஷ்வாஹா கூறுகையில், கட்சியில் உள்ளவர்களுக்குத்தான் சீட் தர வேண்டும்.. ஆனால் கட்சிக்கே சம்பந்தமில்லாத, வெளியில் இருந்து வந்தவர்களுக்கு டிக்கெட் தருகிறார்கள். இது என்ன நியாயம். நாங்கள் என்ன உங்களுக்கு உழைச்சிட்டே இருக்கணும், ஆனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர மாட்டீர்களா.. நீங்க தலைவர்களாக இருந்து எல்லாவற்றையும் அனுபவிப்பீங்க.. நாங்க உழைச்சுக் கொட்டிட்டே இருக்கணும், உங்களை உயர்த்திட்டே இருக்கணுமா. உங்களுக்கு அடிமையாக இருக்க நாங்க இங்க இல்லை என்று கோபமாக கூறினார்.




சிராக் பாஸ்வான் தனக்கு பாஜக கொடுத்த 5 சீட்டுகளையும் நல்ல விலைக்கு விற்று விட்டார், பீகார் மக்களுக்கு அவர் துரோகம் செய்து விட்டார். அவருக்கு பீகார் மக்கள் கடுமையான பதிலடியைத் தருவார்கள் என்று ரவீந்திரா சிங் கூறியுள்ளார். கட்சியை விட்டு விலகிய தலைவர்கள் அப்படியே இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்


40 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் வைஷாலி,  ஹாஜிப்பூர், சமஸ்டிப்பூர், காகர்யா, ஜமுய் ஆகிய ஐந்து தொகுதிகளில் சிராக் பாஸ்வான் கட்சி போட்டியிடவுள்ளது. பீகாரில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.