பாஜகவின் Speed Mode.. பாமக, தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி உறுதி?.. இன்று மாலைக்குள் தெரியும்!

Meenakshi
Mar 11, 2024,01:00 PM IST

சென்னை:  நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தையை வேகப்படுத்தியுள்ளது பாஜக. மத்திய அமைச்சர்கள் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். இன்று மாலைக்குள் கூட்டணி இறுதியாகி விடும் என்று பரபரப்பாக கூறப்படுகிறது. 


பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, அமமுக, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, தமாகா, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுவதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. 


தமிழ்நாட்டில் பாஜக , அதிமுக கூட்டணிகள் இன்னும் தெளிவாகாமல் உள்ளன. இரு கட்சிகளும் தனித்தனியாக பல கட்சிகளுடன் பேசி வருகின்றன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 




தேமுதிக, பாமக ஆகியவை வழக்கம் போல அதிமுக, பாஜகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. அதிமுகவுடன் கூட்டணி சேர டாக்டர் ராமதாஸ் விரும்புவதாகவும், ஆனால் பாஜகவுடன் அணி சேர டாக்டர் அன்புமணி ராமதாஸ் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. மறுபக்கம் தேமுதிக அதிமுகவுடன் பேசி வந்தது. அதேசமயம், பாஜக தரப்புடனும் ரகசியமாக பேசி வந்ததாகவும் தகவல்கள் கூறின.


இந்த நிலையில் இன்று மாலைக்குள் கூட்டணி முடிவாகி விடும் என்று புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார். இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி மற்றும் வி.கே.சிங் ஆகியோர் இன்று தமிழகம் வந்துள்ளனர். இதனால் கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகம் பிடித்துள்ளன.  எல்லாம் முடிந்து இன்று மாலை கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பாஜக தலைவர்கள், செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


அண்ணாமலையை சந்தித்தார் சரத்குமார்


இதற்கிடையே இன்று முற்பகல் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பாஜக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.


இதற்கிடையே, மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜலட்சுமி, இன்று காலை அண்ணாமலையை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.