பீகார் ரயில்வே பிளாட்பாரத்தில்.. குண்டக்க மண்டக்க "குரங்கு பல்டி" அடித்த இளைஞர்!

Su.tha Arivalagan
Jul 13, 2023,12:54 PM IST
பாட்னா: பீகாரில் உள்ள மான்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் பல்டி அடித்து வீடியோ ஷூட் பண்ணி பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளுவதற்காக நம்மவர்கள் செய்யும் காரியங்கள் பல நேரங்களில் கடுப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளன. இயல்பானதாக எதையும் பெரும்பாலானவர்கள் செய்வதில்லை. மாறாக அடுத்தவர்களை சிரமப்படுத்தி பல விஷயங்களைச் செய்து அதிலிருந்து லாபம் அடையே பார்க்கிறார்கள்.



குறிப்பாக பொது இடங்களில் ஏதாவது பிராங்க் செய்வது, கவனத்தை ஈர்க்கும் வகையிலான காரியங்களைச் செய்து பரபரப்பை ஏற்படுத்துவது பலரின் வழக்கமாக உள்ளது. இதனால் மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படுவது குறித்து அவர்கள் கவலைப்படுவதே இல்லை.

இப்படித்தான் பீகார் மாநிலம் மான்பூர் ரயில் நிலையத்தில் ஒரு இளைஞர் குரங்கு போல பல்டி அடித்து பரபரப்பையும்,  பார்த்தவர்களுக்கு படபடப்பையும் ஏற்படுத்தி  விட்டார். பிளாட்பாரத்தில் நின்றவர்கள் இவர் செய்த அந்த குரங்குச் சேட்டையைப் பார்த்து பீதி அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து ரயில்வே போலீஸார் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே போலீஸ் தரப்பில் கூறுகையில், இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. இதுபோல செய்ய நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் பாதுகாப்புதான் முக்கியம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் பல்டி அடித்து விளையாடியதற்காக கைது என்பதெல்லாம் சற்று டூ மச்சாக தெரிவதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.  ஆனால் பலர் இந்த கைது நடவடிக்கையைப் பாராட்டியுள்ளனர். இதுபோல செய்தால்தான் பொது இடங்களில் இப்படி அத்துமீறி நடப்போரின் அட்டகாசம் குறையும் என்பது அவர்களது கருத்தாகும்.