கடிச்ச கண்ணாடி விரியன் பாம்பை கையில் பிடித்துக் கொண்டு.. மருத்துவமனைக்கு வந்த பிரகாஷ்!

Su.tha Arivalagan
Oct 17, 2024,10:39 AM IST

பாட்னா: பீகாரைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னை கடித்த பாம்பை கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் பாம்பை பிடித்தபடியே அவர் ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கையில் இருந்த பாம்பை அவர் விட்ட பிறகே சிகிச்சையை தொடங்கினர் டாக்டர்கள்.


பீகார் மாநிலம் பகல்பூரைச் சேர்ந்தவர் பிரகாஷ் மண்டல். இவரை சம்பவத்தன்று ஒரு பெரிய கண்ணாடி விரியன் பாம்பு கடித்து விட்டது. கடும் விஷத்தன்மை கொண்ட இந்த பாம்புக் கடியால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், சுதாரித்துக் கொண்டு தன்னைக் கடித்த பாம்பை கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டு நடந்தே மருத்துவமனைக்கு வந்தார்.




அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அவர் வந்த விதத்தைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் அப்படியே வராண்டாவில் படுத்து விட்டார். அப்படியும் கூட கையில் இருந்த பாம்பை அவர் விடவில்லை. இதையடுத்து உடனடியாக ஸ்டிரெச்சர் கொண்டு வரப்பட்டது. அதில் அவரைத் தூக்கிப் போட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.


ஆனால் கையில் பாம்பை வைத்துக் கொண்டிருந்த பிரகாஷிடம் செல்ல டாக்டர்கள் அஞ்சினர். இதையடுத்து அவர் பாம்பை கீழே விட்டார். அதன் பின்னர் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பிறகு பிரகாஷுக்கு சிகிச்சை தொடங்கியது. அவரது நிலை என்ன என்று தெரியவில்லை. அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.


கண்ணாடி விரியன் பாம்பு மிகவும் விஷத் தன்மை வாய்ந்தது. இந்தியாவில் இது அதிக அளவில் காணப்படுகிறது. அதேபோல தைவான், ஜாவா போன்ற நாடுகளிலும் இது அதிகம் உள்ளது.  இந்தியாவில் அதிக அளவில் பறிபோகும் உயிர்களுக்கு கண்ணாடி விரியன் பாம்புக் கடிதான் காரணம் என்று ஒரு புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது. காரணம் இவை அதிக அளவில் விவசாய  நிலங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்