பாஜகவுக்கு 4000 எம்.பிக்கள் கிடைப்பாங்க.. தப்புத் தப்பாக பேசிய நிதீஷ் குமார்.. டென்ஷன் ஆன தலைவர்கள்!

Su.tha Arivalagan
Apr 08, 2024,05:36 PM IST

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தப்புத் தப்பாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படிப்பட்ட தலைவர், இப்படி உளறலாக பேச ஆரம்பித்து விட்டாரே என்று பலரும் வருத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.


பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சில மாதங்களுக்கு முன்புதான் பாஜக கூட்டணியில் போய்ச் சேர்ந்தார். இந்த நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பீகாரின் நவாடா நகருக்கு வந்திருந்தார். அங்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இணைந்து கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் மற்றவர்கள் பேசியதை விட நிதீஷ் குமார் பேசிய பேச்சுதான் பரபரப்பாகியுள்ளது. காரணம், அவரது பேச்சில் பல இடங்களில் தவறுகள் இருந்ததே.


கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் பேசிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் காலைத் தொட்டு  ஆசி வாங்கினார் நிதீஷ் குமார். நிதீஷ் குமார் பேசி முடித்த பிறகு பேசிய பிரதமர் மோடி, நீங்கள் முடிக்கும் வரை காத்திருந்தேன். ஆனால் நீங்கள் பேசி முடித்த பிறகு, எனக்கு நீங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றையும் பேசிட்டீங்க என்று ஜாலியாக கூறினார் பிரதமர் மோடி.




ஆனால் நிதீஷ் குமாரின் பேச்சில் பல தவறுகள் இருந்தது. இதை சுட்டிக் காட்டி பலரும் அவரை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். உதாரணத்திற்கு, நிதீஷ் குமார் பேசியபோது, பாஜக வரும் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெறும். பாஜகவுக்கு 4000 எம்.பிக்கள் கிடைப்பார்கள். மீண்டும் பிரதமர் பதவியில் மோடி அவருவார் என்றார். இதைக் கேட்டதும் மேடையில் இருந்தவர்களே பரபரப்பானார்கள்.


நாடாளுமன்ற மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையே 543 தான்.  வரும் தேர்தலில் 400 தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி பெறும் என்றுதான் பிரதமர் மோடியே கூறி வருகிறார். ஆனால் நிதீஷ் குமார் 4000 தொகுதிகளை அள்ளிக் கொடுத்து விட்டார்!


நிதீஷ் குமார் பேச்சில் நிறைய குளறுபடிகள் வருவதைப் பார்த்த மூத்த ஐக்கிய ஜனதாதள தலைவர் விஜய் குமார் செளத்ரி, பேச்சை சீக்கிரம் முடிக்குமாறு, முதல்வரைப் பார்த்து கையைக் காட்டி சுட்டிக் காட்டினார்.  மேடையில் இருந்த பல்வேறு தலைவர்களும் கூட அசவுகரியமாக நெளிவதை கண் கூடாகப் பார்க்க முடிந்தது. பிரதமரின் முகத்திலும் கூட அது தெரிந்தது. ஆனாலும் நிதீஷ் குமார் எதையும் கண்டு கொள்ளவில்லை. தான் பேச விரும்பியதை பேசி விட்டுத்தான் அமர்ந்தார். அவர் பேச்சை நிறுத்திய பின்னர்தான் அத்தனை பேரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.


கடந்த 2 வருடமாகவே பேசும்போது பல தவறுகளைச் செய்து வருகிறார் நிதீஷ் குமார். அவரது பல பேச்சுக்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. வாய் தவறி அவர் பேசுவது பிரச்சினையாகி விடுகிறது.  இப்படித்தான் கடந்த செப்டம்பர் மாதம் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியின்போது காவல்துறையின் செயல்பாடு குறித்து ஒருவர் குறை கூறினார். இதைக் கேட்டதும் கோபமடைந்த முதல்வர் நிதீஷ் குமார், உள்துறை அமைச்சருக்குப் போனைப் போடுமாறு அதிகாரியிடம் கூறினார். ஆனால் அவர்தான் உள்துறையையும் கவனிக்கிறார் என்பதை நிதீஷ் குமார் மறந்து விட்டார். இதனால் அந்த இடத்தில்  பரபரப்பு ஏற்பட்டது.


நவாடா கூட்டத்தில் பிரதமர் காலை நிதீஷ் குமார் தொட்டு வணங்கியதும் கூட பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரதமருக்கும், நிதீஷ் குமாருக்கும் சமமான வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், பிரதமர் காலை நிதீஷ் குமார் தொடும் படத்தைப் பார்த்து அத்தனை பேரும் வேதனை அடைந்தோம். அவருக்கு என்னாச்சு. நிதீஷ் குமார் எங்களையெல்லாம் காப்பவர்.  ஆனால் அவர் பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்குகிறார். இப்படி ஒரு முதல்வரை நாங்கள் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.