பட்ஜெட் 2024 : வெள்ள நிவாரணமாக ரூ.11,000 கோடி ஒதுக்கீடு...தமிழ்நாட்டிற்கு எதுவும் சொல்லலியே!

Su.tha Arivalagan
Jul 23, 2024,07:07 PM IST

டில்லி :   இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் பல்வேறு பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.11,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால் இந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இல்லை என்பது தமிழ்நாட்டுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.


பீகார், ஆந்திராவிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இன்றைய பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியான நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது என மறுத்திருந்தாலும், கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதே போல் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆளும் ஆந்திராவிற்கு புதிய தலைநகரான அமராவதி நகரை அமைப்பது உள்ளிட்டவற்றுக்காக ரூ. 15,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் சந்திரபாபு நாயுடு முன்பே கோரிக்கை வைத்த படி, நிலுவையில் இருந்த வெள்ள மற்றும் வறட்சி நிவாரண நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.




இமாச்சல பிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் வெள்ள நிவாரண நிதி இன்றைய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. ஆனால் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்களை சந்தித்த தமிழகம் இந்த மாநிலங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு தமிழகத்தில் பெய்த கனமழையில் நெல்லை, தூத்துக்குடி, சென்னை ஆகிய நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்றும் கூட பல பகுதிகளில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சாலைகளும், பாலங்களும் சரி செய்யப்படாமல் உள்ளன. நெல்லை நகரமே வெள்ளத்தில் மூழ்கிய போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் செம வைரலானது.


மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி அறிவித்துள்ள மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்கள், மீதி இருப்பவை அவற்றின் கூட்டணி கட்சிகளும், பாஜக.,விற்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் மாநிலங்களும் தான் என சொல்லப்படுகிறது. தங்கள் கட்சி ஆளும் மாநிலங்கள் மற்றும், கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே பட்ஜெட் அறிவிப்புகளில் பெரும்பாலானவை வெளியாகி உள்ளதால் எதிர்க்கட்சிகள், கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றன.