100 கிராம் கூடுதல் எடை.. வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம்.. அதிர்ச்சியில் உறைந்தது இந்தியா

Su.tha Arivalagan
Aug 07, 2024,12:35 PM IST

பாரிஸ்:   ஒட்டுமொத்த இந்தியாவும் மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராக இருந்த நிலையில்,  ஒலிம்பிக் போட்டியில் கூடுதல் உடல் எடை காரணமாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


100 கிராம் கூடுதல் எடையுடன் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது மொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 




ஒலிம்பிக் மகளிர் மல்யுத்ததப் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டிருந்தார் வினேஷ் போகத். அரை இறுதிப் போட்டிக்கு அவர் முன்னேறியிருந்தார். நிச்சயம் பதக்கம் உறுதி என்ற நிலையில் இருந்த வினேஷ் போகத்துக்கு இன்று அதிர்ச்சி செய்தி வந்து சேர்ந்துள்ளது. 50 கிலோவை கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது. இதனால் வினேஷ் மற்றும் இந்தியாவின் பதக்கக் கனவு தகர்ந்துள்ளது.


உடல் எடையைக் குறைப்பதற்காக நேற்று இரவு முழுவதும் கடுமையாக உடற்பயிற்சிகள் செய்துள்ளார் வினேஷ் போகத். சைக்கிளிங் செய்தும், உடற்பயிற்சி செய்தும் கடுமையாக முயற்சி செய்துள்ளார். ஆனாலும் அது பலன் அளிக்காமல் போய் விட்டது. 


இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறுகையில்,  மகளிர் 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இரவு முழுவதும் கடுமையாக முயற்சி செய்தும் கூட 50 கிராமுக்கு மேல் எடையைக் குறைக்க முடியவில்லை. இந்த நேரத்தில் இதற்கு மேல் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. வினேஷின் பிரைவசியை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மீதம் உள்ள போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புகிறோம் என்று கூறியுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி வேதனை


இந்த நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி வருத்தமும், வேதனையும் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:


வினேஷ்... நீங்கள் சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியன். இந்தியாவின் பெருமை. ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் ஒரு ரோல் மாடல். இன்றைய பின்னடைவு வலியைத் தருகிறது.  நான் அனுபவிக்கும் வேதனையை எனது வார்த்தைகள் வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்.  அதேசமயம், நீங்கள் போர்க்குணம் படைத்தவர். சவால்களை துணிவுடன் எதிர்கொள்வது உங்களது குணாதிசயம். இதிலிருந்து வலிமையாக மீண்டு வாருங்கள். நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.