டிரெண்டிங்கில் Bharat Mandapam..  உலகத் தலைவர்கள் ஆச்சரியம்!

Su.tha Arivalagan
Sep 09, 2023,09:52 AM IST
டெல்லி:  டெல்லி பாரத் மண்டபம்தான் இப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த இடத்தில்தான் ஜி20 மாநாடு நடைபெறுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்தியாதான் தற்போது ஜி20 அமைப்பின் தலைவராக இருக்கிறது. டெல்லியில் இந்த மாநாடு இன்று தொடங்கி நாளை வரை நடைபெறவுள்ளது.





மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் பெரும் முக்கியத்துவத்தை இந்த மாநாடு பெற்றுள்ளது.

மாநாட்டின் ஹைலைட்டாக அமைந்திருப்பது பாரத் மண்டபம்தான். உலகத் தலைவர்களுக்கு பெரும் கலை விருந்தாக இந்த மண்டபம் மாறியுள்ளது.

சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம்தான் தற்போது பாரத் மண்டபம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட, மிகவும் கலை நயத்துடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்தின் கட்டுமான டிசைன் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் உள்ளது. டெல்லியின் பிரகதி மைதானத்தில்தான் இந்த மண்டபம் உள்ளது.



கடந்த ஜூலை 26ம் தேதி மாற்றியமைக்கப்பட்ட பாரத் மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதி நவீன வசதிகளுடன் கூடிய, உலகத் தரம் வாய்ந்த மையமாக இது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான மைய மண்டபம், கண்காட்சி அரங்குகள், ஆம்பிதியேட்டர் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த மண்டபத்தின் முகப்பில் 27 அடி உயர நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழ்நாட்டின் சுவாமிமலையைச் சேர்ந்த சிற்பி ராதாகிருஷ்ணன் ஸ்பதிதான் வடித்துள்ளார். மண்டபத்தின் மேல் பகுதி மைசூர் தலைப்பாகை போலவே பார்ப்பதற்கு அச்சு அசலாக இருக்கிறது.  மண்டபத்தின் உள்ள 29 நாடுகளின் கலைப் படைப்புகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது ஜி20 மாநாட்டுக்கு வந்திருக்கும் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் கண்ணுக்கு விருந்தாக அமையும். இந்தியாவின் கலை, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களும் மிகப் பெரிய அளவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ரூ. 2700 கோடி மதிப்பீட்டில் இந்த பாரத் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த ஒரே மண்டபத்துக்குள் பார்த்து விட முடியும் என்று கூறும் அளவுக்கு இந்தியாவின் மொத்த அடையாளங்களையும் இங்கு அழகாக இடம் பெறச் செய்துள்ளனர்.

இங்குள்ள மைய மண்டபத்தில் கிட்டத்தட்ட 7000 பேர் வரை அமர முடியும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப் பிரமாண்டமான ஓபரா ஹவுஸையும் மிஞ்சி விட்டது நமது பாரத் மண்டபம்.