பொது இடத்தில் மொபைலுக்கு சார்ஜ் போட போறீங்களா? மக்களே உஷார்

Aadmika
Aug 06, 2023,04:35 PM IST
டில்லி : ரயிலோ, ரயில் நிலையமோ அல்லது ஏர்போர்ட்டோ எந்த இடமாக இருந்தாலும் பொது இடங்களில் உள்ள பிளக் பாயிண்ட்களை பயன்படுத்தி சார்ஜ் போடுபவர்களுக்கு ஆர்பிஐ ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆர்பிஐ வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் எச்சரிக்கையின் படி, பொது இடங்களில் சார்ஜ் போடுபவர்களின் மொபைல்களில் உள்ள டேட்டாக்கள், பணம் தொடர்பான விபரங்களை சைபர் கிரிமினல்கள் திருடுவதாக எச்சரித்துள்ளது. மொபைல்கள் மூலம் சத்தமில்லாமல் ஒரு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு வருதாகவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இந்த நூதன திருட்டுக்கு Juice jacking என பெயரும் வைக்கப்பட்டுள்ளது. 

Juice jacking என்றால் நீங்கள் உங்கள் மொபைல் போனுக்கு பொது இடங்களில் ஜூஸ் கொடுக்கிறீர்கள். இதை பயன்படுத்தி அதில் உள்ள தகவல்களை உறிஞ்சி எடுப்பது. ஒருவேளை உங்கள் மொபைலில் இருந்து தகவல்கள் திருடப்பட்டால் அடுத்த நொடியே உங்கள் வங்கியில் உள்ள பணம் மொத்தமும் திருடப்பட்டு விடும். 




தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் என அனைவரும் பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இருந்தாலும் பல இடங்களில் பலரின் வங்கி விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை சைபர் கிரிசினல்கள் திருடி விடுகின்றனர். இது எப்படி என ஆராய்ந்ததில் புது விதமாக இப்படி ஒரு திருட்டு வேலை, மோசடி நடப்பது தெரிய வந்தள்ளது. இந்த திருட்டுக்காக பல இன்டர்நெட் டூல்களை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

மொபைல் மட்டுமல்ல லேப்டாப், ஸ்மார்ட்போன் என எதில் நீங்கள் பொது இடத்தில் சார்ஜ் போட்டாலும் அதிலும் உள்ள மொத்த தகவல்களும் திருடப்படுவதாக ஆர்பிஐ எச்சரித்துள்ளது. பொது சார்ஜிங் ஸ்டேஷன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள மால்வேர்களை குறிவைத்தே இவர்கள் செயல்பட்டு வருவதாகவும், நீங்கள் சார்ஜ் செய்யும் போது உங்களையும் அறியாமல் இந்த மால்வேர்கள் உங்கள் மொபைல் அல்லது லேட்டாப்பிற்குள் அனுப்பப்பட்டு தகவல்கள் மொத்தமும் திருடப்படுவதாக சொல்லப்படுகிறது. 

தற்போது மக்கள் அனைவரும் தங்களின் வங்கி கணக்கு விபரங்கள், கிரெடிட் கார்டு அல்லது லாக்கர் பற்றி தகவல்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அனைத்தையும் கூகுள் மெயிலில் தான் சேகரித்து வைக்கிறார்கள். இதில் உங்களின் லாகின் ஐடி, பாஸ்வேர்டு, மொபைல் பேங்கிங் அல்லத ஆன்லைன் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இருக்கும். இதன் மூலமாக தான் எளிதில் உங்களை பற்றிய தகவல்களை திருட, உடனடியாக வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படுகிறது. 

இந்த புதிய நூதன திருட்டு மத்திய அரசுக்கு புதிய தலைவலியாக அமைந்துள்ளது. அதனால் தான் இது பற்றி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.