வங்கி மோசடி விவகாரம்.. ஜெட் ஏர்வேஸ் ஓனர் நரேஷ் கோயல் கைது

Aadmika
Sep 02, 2023,09:46 AM IST

டில்லி : வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரைண நடைபெற்று வருகிறது.

கனரா வங்கியில் ரூ.538 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக மே மாதம் நரேஷ் கோயலின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. 2011 ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை ஏர்வேஸ் நிறுவனத்துக்கான ஆலோசனை சேனைகளுக்கு என்று ரூ.1152 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.420 கோடி ஜெட் ஏர்வேசுடன் கொஞ்சமும் தொடர்பில்லாத வேறு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்தது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த விவகாரத்தில் தலையிட்ட அமலாக்கத்துறை நரேஷ் கோயல், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. 

இந்த வழக்கு தொடர்பாக இன்று நரேஷ் கோயலிடம் அமலாக்கத்துறை பல மணி நேரம் விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து கனரா வங்கியில் ரூ.538 கோடி வரை கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்து, அழைத்துச் சென்றுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரைண நடத்தப்பட்டு வருகிறது.