உங்க மனைவி கட்டியுள்ள சேலையை முதலில் எரிங்க.. அதிர வைத்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

Su.tha Arivalagan
Apr 02, 2024,06:04 PM IST

டாக்கா:  இந்தியப் பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷத்தை வங்கதேச எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதிலடி கொடுத்துள்ளார்.


மாலத்தீவைத் தொடர்ந்து தற்போது வங்கதேசத்திலும் இந்திய எதிர்ப்பு உணர்வு எழ ஆரம்பித்துள்ளது. வங்கதேச எதிர்க்கட்சிகள் இந்தியப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற முழக்கத்தை கையில் எடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்தியப் பொருட்களை வாங்காதீர்கள் என்ற பிரச்சாரம் அங்கு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.




இந்த நிலையில் ஆளும் அவாமி லீக் கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசும்போது அதன் தலைவரும், பிரதமருமான ஷேக் ஹசீனா எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்துப் பேசினார்.  அவரது பேச்சிலிருந்து:


எனக்கு ஒரே ஒரு கேள்விதான் உள்ளது. உங்களது வீட்டில், உங்களது மனைவியரிடம் எத்தனை சேலைகள் உள்ளன. அவை எந்த நாட்டு சேலைகள் அந்த சேலைகளை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து தீவைத்து எரிக்க நீங்கள் தயாரா இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள். இதை எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்ல வேண்டும்.


சேலை மட்டுமா, கரம் மசாலா, வெங்காயம், பூண்டு, இஞ்சி எல்லாமே இந்தியாவிலிருந்துதான் வருகிறது. அதையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்கள் இனி பயன்படுத்த மாட்டார்கள் என்று நம்புவோம் என்றார் ஷேக் ஹசீனா.


வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ருஹுல் கபீர் ரிஸ்வி சமீபத்தில் காஷ்மீர் சால்வையை தெருவில் வீசி, இந்தியப் பொருட்களை புறக்கணிப்போம் என்று முழக்கமிட்டார். இதையடுத்து இதுதொடர்பான போராட்டம் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளது. வங்கதேசத்தில் பிரதமராக உள்ள ஷேக் ஹசீனா, தொடர்ந்து 4வது முறையாக ஆட்சியில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.