ஓட்டுப் போட்டாச்சா.. வாங்க.. வெண்ணெய் தோசை சாப்பிட்டுப் போங்க.. கலக்கிய ஹோட்டல்!

Su.tha Arivalagan
Apr 26, 2024,05:38 PM IST
பெங்களூரு: பெங்களூரில் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு ஹோட்டலில் இலவசமாக தோசை, லட்டு, ஜூஸ் தரப்பட்டு அமர்க்களப்படுத்தி விட்டனர்.

இன்று கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.  அதன்படி பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு ஊரகம், பெங்களூரு மத்திய, உடுப்பி - சிக்மகளூர், தட்சின் கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மைசூரு, சாம்ராஜ் நகர், ஹசன், கோலார், மாண்ட்யா, சிக்கபல்லபூர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள நிசர்கா கிராண்ட் ஹோட்டலில் வாக்காளர்களுக்கு ஒரு இலவச ஆபரை அறிவித்திருந்தனர். அதன்படி இன்று வாக்களித்து விட்டு வரும் வாக்காளர்களுக்கு இலவசமாக வெண்ணெய் காலி தோசை, நெய் லட்டு மற்றும் ஜூஸ் ஆகியவை இலவசமாக தரப்படுகிறது. வாக்களித்து விட்டு வந்து அதற்கான அடையாளமாக மையிட்ட அடையாளத்தைக் காட்டி இதைப் பெற்றுக் கொள்ளலாம்.



இதையடுத்து ஏராளமான வாக்காளர்கள் கையில் மை வைத்துக் கொண்ட விரலுடன் ஹோட்டலுக்குப் படையெடுத்தனர். இளைஞர்கள் முதல் வயதானவர்கள் பலரும் ஹோட்டல் முன்பு நீண்ட வரிசையில் நின்று இலவச ஆபர் உணவைப் பெற்றுக் கொண்டதைக் காண முடிந்தது.

இது மட்டுமல்லாமல் பெங்களூரில் பல்வேறு நிறுவனங்களும் இதுபோன்ற இலவச ஆபர்களை அறிவித்திருந்தன. பெல்லாந்தூரில் உள்ள பப் ஒன்றில் வாக்காளர்களுக்காக ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய இரு திங்கள் மக் பீர் இலவசமாக தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மற்ற வகை மதுக்களுக்கும் தள்ளுபடி சலுகையையும் அறிவித்துள்ளனர்.

ரேபிடோ டாக்சி நிறுவனமும் வாக்களிக்கச் செல்லும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சவாரி சலுகையை அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனமும் கூடுதல் ரயில்களை இயக்குகிறது.