சசிகலா, இளவரசியை கைது செய்ய பெங்களூரு கோர்ட் உத்தரவு

Aadmika
Sep 05, 2023,09:55 AM IST
பெங்களூரு : தொடர்ந்து நேரில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் சசிகலா மற்றும் இளவரசியை கைது செய்ய பெங்களூரு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருடன் அவரது உறவினரான இளவரசியும் அடைக்கப்பட்டிருந்தார்.



சிறையில் இருந்த போது சொகுசு வசதிகளை பெறுவதற்காக சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் பெரும் பரப்பாக பேசப்பட்டு, சிறைத்துறை அதிகாரிகள் பலரும் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

தற்போது சசிகலா, இளவரசி ஆகியோர் ஜாமினில் வெளியே இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா மற்றும் இளவரசிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர்கள் ஆஜராவதை தவிர்த்து வந்தனர். இதனையடுத்து சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, அவர்களுக்கு ஜாமின் கையெழுத்திட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கின் அடுத்த விசாரைண அக்டோபர் 05 ம் தேதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.