டெல்லியை மிஞ்சிய கொடூரம்.. ஓடும் காரில் பெண் பலாத்காரம்.. 4 பேர் கும்பல் அட்டகாசம்

Su.tha Arivalagan
Mar 31, 2023,03:13 PM IST
பெங்களூரு: டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்தைப் போலவே, பெங்களூரிலும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது.

பெங்களூரு கோரமங்களாவில் தனது காதலருடன் பார்க்கில் இரவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று விடிய விடிய பலாத்காரம் செய்துள்ள செயல் மக்களை அதிர வைத்துள்ளது. அந்த நான்கு பேரையும் போலீஸார் தற்போது கைது செய்து விட்டனர்.



மார்ச் 25ம் தேதி இரவு இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. அன்றையஇரவு நடு ராத்திரி நேரத்தில் ஒரு ஜோடி கோரமங்களா தேசிய விளையாட்டுப் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒருவர், இந்த நேரத்தில் என்ன பேச்சு கிளம்புங்க என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் கிளம்பியுள்ளனர்.

அப்போது அந்த காதல் ஜோடியில் ஆண் பைக்கில் கிளம்பிச் சென்றார். அப்பெண் நடந்து போய்க் கொண்டிருந்தார். இதையடுத்து அவர்களை மிரட்டிய நபர் போன் செய்து தனது நண்பர்கள் 3 பேரை அங்கு வரவழைத்தார். பின்னர் நான்கு பேரும் சேர்ந்து அப்பெண்ணை பலவந்தப்படுத்தி காரில் ஏற்றிக் கொண்டு தப்பினர்.

இரவெல்லாம் ஓடும் காரில் வைத்து நான்கு பேரும் அப்பெண்ணை சீரழித்துள்ளனர். பின்னர் அதிகாலையில் அப்பெண்ணின் வீட்டருகே அவரை போட்டு விட்டு தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸுக்குப் புகார் செல்லவே அவர்கள் விரைவாக நடவடிக்கையில் இறங்கினர். சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆராய்ந்து தற்போது குற்றவாளிகள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் பஸ்ஸில் வைத்து நிர்பயா என்ற மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இப்போது அதே போல பெங்களூரில் நடந்திருப்பது மக்களை அதிர வைத்துள்ளது.