வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்.. பெண் அதிகாரியைக் கொன்ற டிரைவர்.. கைது

Su.tha Arivalagan
Nov 06, 2023,06:34 PM IST

பெங்களூரு: பெங்களூரில், அரசு பெண் அதிகாரியைக் கொடூரமாகக் கொன்ற சம்பவத்தில் அவரது முன்னாள் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கர்நாடக மாநில அரசின் சுரங்கத்துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் பிரதீமா ராமன். இவர் தனது கணவர், மகனுடன் குவெம்பு நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சனிக்கிழமையன்று இவரது கணவரும், மகனும், சொந்த ஊரான தீர்த்தஹள்ளிக்குப் போயிருந்தனர். வீட்டில் பிரதீமா மட்டுமே தனித்து இருந்தார்.


அடுத்த நாள் காலையில் பிரதீமாவின் சகோதரர் தனது தங்கையைக் காண வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்படாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவர் உள்ளே போய் பார்த்தபோது பிரதீமா கொலையுண்ட நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சியானார். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து பிரதீமாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கத்தியால் குத்தி பிரதீமா கொல்லப்பட்டிருந்தார்.




இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கிரண் என்ற  நபரைப் போலீஸார் , சாம்ராஜ் நகரில் வைத்துக் கைது செய்துள்ளனர். இவர் பிரதீமாவிடம் டிரைவராகப் பணியாற்றி வந்தவர். சமீபத்தில் இவரை வேலையை விட்டு நீக்கி விட்டார் பிரதீமா. இந்த ஆத்திரத்தில் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்து பிரதீமாவுடன் வாக்குவாதம் செய்துள்ளார் கிரண். பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி விட்டார். இத்தகவலை பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் தெரிவித்துள்ளார்.