"ஹலோ பெங்களூர் கார் ஓனர்கள்.. கழுவக் கூடாது.. தொடைச்சா போதும்".. மீறினால் ரூ. 5000 அபராதம்!

Su.tha Arivalagan
Mar 08, 2024,03:17 PM IST

பெங்களூரு: என்னடா இது.. நம்ம பெங்களூருக்கு வந்த சோதனை.. வந்தவர்க்கெல்லாம் வாரி வழங்கிய அந்த ஊரில் இப்போது தண்ணீருக்குப் பெரும் பஞ்சம் வந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.


இப்படி ஒரு தண்ணீர்ப் பஞ்சத்தை சமீப காலத்தில் பெங்களூரு சந்தித்து கிடையாது என்பதால் தண்ணீர்ப் பஞ்சம் பெரும் பேசு பொருளாகியுள்ளது. பரபரப்பாகியுள்ளது.


பெங்களூரில் குடிக்கத் தண்ணீர் இல்லை, குளிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் டாய்லெட் போய் விட்டு வந்தால் கழுவக் கூட தண்ணீர் இல்லை என்று கூறும் அளவுக்கு தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது.  இந்த நிலையில் தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்க ஒவ்வொரு தரப்பினரும் விதம் விதமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன.




அதன்படி பெங்களூரில் உள்ள குடியிருப்பாளர்கள் சங்கங்கள் பல்வேறு தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகளை களம் இறக்கியுள்ளனர். அதில ஒன்று கார்களை கழுவக் கூடாது என்பது. கார்களை கழுவுவதை முழுமையாக நிறுத்த வேண்டும். அதற்குப் பதில் மாற்று வழிகளைப் பயன்படுத்தி கார்களை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல குடியிருப்பு வளாகங்களில் நீச்சல் குளங்கள் இருந்தால் அதை உடனடியாக மூடி விட வேண்டும், தண்ணீர் நிரப்பக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


கார்களைக் கழுவ தண்ணீரைப் பயன்படுத்தினால் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பயன்படுத்தினால் தினசரி ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


கனகபுராவில் உள்ள பிரஸ்டிக் பால்கன் சிட்டி குடியிருப்பாளர்கள் நலச் சங்கமானது, வீடுகளில் சாப்பிடுவதற்கு டிஸ்போசபிள் தட்டுகள், கட்லெரி மற்றும் வெட் வைப்  போன்றவற்றைப் பயன்படுத்தி தண்ணீரை சேமித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் தட்டுக்களை கழுவும் தேவை இருக்காது, தண்ணீரை ஓரளவுக்கு சேமிக்க முடியும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.