பையுடன் வேகமாக நடந்து செல்லும் இளைஞர்.. இவர்தான் பெங்களூர் ஹோட்டலில் குண்டு வைத்தவரா?

Su.tha Arivalagan
Mar 02, 2024,05:45 PM IST

பெங்களூர்: முதுகில் பையுடன் வேகமாக நடந்து செல்லும் இளைஞரின் சிசிடிவி வீடியோ பதிவை பெங்களூரு காவல்துறை வெளியிட்டுள்ளது. ரவா இட்லிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு, தான் கொண்டு வந்த பையை ஹோட்டலில் வைத்து விட்டுப் போனவர் இவர்தான். எனவே இவர்தான் வெடிகுண்டை வைத்து விட்டுப் போன நபராக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.


பெங்களூரு ஒயிட்பீல்ட் பகுதியில் உள்ள தி ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் நேற்று அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள கேமரா பதிவுகளை போலீஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.


இந்த சிசிடிவி பதிவில் ஒரு நபர் சிக்கியுள்ளார். முதுகில் மாட்டி பையுடன் வந்த அவர்  தனது பையை ஹோட்டலில் வைத்து விட்டு ரவா இட்லிக்கு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் இட்லியை வாங்காமலேயே மெதுவாக நழுவிச் சென்றுள்ளார். அதாவது வாடிக்கையாளர் போல வந்து வெடிகுண்டு அடங்கிய பையை வைத்து விட்டுப் போயுள்ளார் இந்த நபர்.




இதையடுத்து இந்த நபரை போலீஸார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர். இவருக்கு 30 வயது இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவரது சிசிடிவி பதிவையும் தற்போது போலீஸார் வெளியிட்டுள்ளனர்.  இதற்கிடையே சந்தேகப்படும் இன்னொரு நபரையும் போலீஸார் நேற்று இரவு பிடித்து விசாரித்து வருகின்றனர்.  இவர் சிசிடிவி பதிவில் காணப்படும் நபருடன் இருந்ததாக தெரிகிறது. இதனால் இருவரும் சேர்ந்து குண்டு வைக்க வந்தனரா என்ற சந்தேகம் போலீஸாருக்கு உள்ளது.


சிசிடிவி பதவில் காணப்படும் நபர் மாஸ்க் அணிந்துள்ளார். மூக்குக் கண்ணாடி போட்டுள்ளார். தலையில் தொப்பியும்  அணிந்திருந்தார்.  தற்போது சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்பு சட்டம் (யுஏபிஏ), வெடிகுண்டு சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மறுபக்கம் என்ஐஏ அதிகாரிகளும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.


அரசியலாக்கக் கூடாது - முதல்வர் சித்தராமையா


இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், இது ஒரு வெடிகுண்டு வெடிப்பு. போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  கடந்த பாஜக ஆட்சியில் மங்களூரில் குண்டுவெடிப்பு நடந்தபோது நாங்கள் அப்போது இருந்த பாஜக அரசைக் குறை கூறவில்லை. இப்போது இதை சிலர் அரசியலாக்குவது வருத்தத்திற்குரியது. அனைவரும் அமைதி காக்க வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள் என்றார் அவர்.