அழுக்கு சட்டை வேட்டியுடன் வந்த விவசாயி.. அனுமதி மறுத்த மெட்ரோ ஊழியர்.. அதிரடியாக சஸ்பெண்ட்!

Meenakshi
Feb 27, 2024,01:11 PM IST

பெங்களூரு: அழுக்கு சட்டை வேட்டி அணிந்து வந்தார் என்று கூறி ஒரு விவசாயியை மெட்ரோ ரயிலில் பயணிக்க  அனுமதிக்க மறுத்துள்ளார் பெங்களூரு மெட்ரோ நிறுவன ஊழியர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த ஊழியரை மெட்ரோ நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


பெங்களூருவை சேர்ந்த விவசாயி ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு மெட்ரோ நிலையத்திற்கு வந்துள்ளார். அழுக்கு வேட்டி, சட்டையுடன் எளிமையான மனிதராக வந்திருந்தார் அவர். கையில்  ஒரு அழுக்கு மூடையும் வைத்திருந்தார். முறையாக பயணச் சீட்டு வாங்கிய பின்னர் மெட்ரோவில்  ஏற சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மெட்ரோ ரயில் ஊழியர்கள் அவரை மெட்ரோவில் ஏற விடாமல் தடுத்துள்ளனர்.


இதனை பார்த்துக் கொண்டிருந்த சக பயணிகள்  பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் வாக்குவாதத்திற்கு பின் விவசாயி மெட்ரோ ரயிலில் ஏற அனுமதிக்கப்பட்டார். அதை அடுத்து அந்த  முதியவரை மெட்ரோ ரயில் அழைத்துச் சென்றனர் சக பயணிகள்.  ஒரு வழியாக அந்த முதியவர் மெட்ரோ ரயிலில் பயணித்து மகிழ்ந்தார். தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் சிரித்த முகத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.




இந்த நிகழ்வு அங்கிருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு மெட்ரோ ரயில்களில் விஐபிக்கள் மட்டும்தான் பயணிக்க வேண்டுமா?  மெட்ரோவில் பயணிக்க ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என்று பலர் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில் விவசாயி பயணம் மேற்கொள்ள இடையூறு செய்த பாதுகாப்பு மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்துள்ளதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் குறித்த பதிவு இணையதள பக்கத்தில் தற்போது பரவி வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் மெட்ரோ நிர்வாகத்தை கண்டித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.