"காசேதான் கடவுளடா".. பாலத்திலிருந்து பணத்தை வீசி எறிந்த நபர்.. பெங்களூரில் பரபர!
பெங்களூரு: பெங்களூருவில் மேம்பாலத்திலுருந்து பணத்தை மழைச் சாரல் போல் வீசி எறிந்த மர்ம நபரின் வீடியோ ஒன்று இணையத்தில் பரபரப்புடன் வைரலாகி வருகிறது.
பெங்களூரு சிட்டி மார்க்கெட் அருகில் உள்ள மேம்பாலத்தில் காலையில் சுமார் 11 மணி அளவில் டிப் டாப்பாக கோட் சூட் அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் தான் வைத்திருக்கும் பையில் இருந்து 10 ரூபாய் நோட்டுகளை எடுத்து தூவானம் தூறல் போடுவது போல் வீசி எறிந்தார்.
மேம்பாலத்திலுருந்து வீசி எறியப்பட்ட பணம் காற்றில் அசைந்தாடி தரையில் விழ, சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு போட்டியிட்டபடி பணத்தை அள்ளிச் சென்றனர். சாலையில் சென்றுகொண்டிருக்கும் வாகனங்களை சிறிதும் பொருட்படுத்தாமல் பணத்தை எடுப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டியதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு படத்தில் வரும் 'காசேதான் கடவுளடா' பாடலில் வருவது போல,, பணத்தை பார்த்ததும், பொதுமக்கள் ஓடி வந்து பணத்தை எடுத்தனர். யார் இவர், எதற்காக பணத்தை வீசுகிறார் என்றெல்லாம் யாரும் யோசிக்கவில்லை, அவரிடம் போய்க் கேட்கவும் இல்லை. சிறிதும் தயக்கம் இன்றி பிஸியாக இயங்கும் சாலையில் சீறிப்பாய்ந்து பணத்தை அள்ளிச் சென்றனர்.
இந்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.