பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததற்காக.. 20 வயது இளைஞனை அடித்துக் கொன்ற கும்பல்

Su.tha Arivalagan
Feb 03, 2023,03:25 PM IST
பெங்களூரு: பெங்களூருவில், 20 வயது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.. அவர் செய்த "தவறு".. ஒரு பெண்ணுடன் அமர்ந்து தனிமையில் பேசிக் கொண்டிருந்ததே!



இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக அனில், லோஹித், பாரத், கிஷோர் என நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக பெங்களூரு வடக்கு துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் கூறியுள்ளார். கொல்லப்பட்ட நபரின் பெயர் கோவிந்தராஜு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கோவிந்தராஜு வீட்டுக்கு வந்த அனில், அவரை அழைத்துள்ளார். பின்னர் கோவிந்தராஜுவை தனது டூவீலரில் ஏற்றிக் கொண்டு அந்தரள்ளி என்ற இடத்திற்குக் கூட்டிப் போயுள்ளார். அங்கு மற்ற 3 பேரும் வந்துள்ளனர். அந்த இடத்தில் வைத்து நான்கு பேரும் கோவிந்தராஜுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். மரக் கட்டையால் சரமாரியாக அடித்ததில், கோவிந்தராஜு சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதன் பின்னர் நான்கு பேரும் தங்களது செல்போனை ஆப் செய்து  விட்டனர். லோஹித்தின் காரில் கோவிந்தராஜுவின் உடலை தூக்கிப் போட்ட நான்கு பேரும், சருமுடிகாட் பகுதியில் உடலைத் வீசி விட்டு தலைமறைவானார்கள்.

இந்த நிலையில் கோவிந்தராஜுவைக் காணாமல் குழப்பமடைந்த குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர்.போலீஸ் விசாரணையில் இந்த நான்கு பேரும் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது கோவிந்தராஜுவைக் கொன்று விட்டதை ஒப்புக் கொண்டனர். ஒரு பெண்ணுடன் பேசியதற்காக கொலையா என்று பெங்களூர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.