750 ஜோடி செருப்பு.. 10,500 சேலைகள்.. ஏலத்திற்கு வரும் ஜெயலலிதாவின் உடமைகள்!
பெங்களூரு: மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி சேலைகள், செருப்புகள் உள்ளிட்ட அவரது உடமைகள் விரைவில் ஏலத்திற்கு வரவுள்ளன.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நால்வருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதா சில கால சிறைவாசத்திற்குப் பின்னர் ஜாமீனில் விடுதலையானார். அதன் பிறகு அவர் மரணமடைந்து விட்டார்.
ஆனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறைத் தண்டனையை முழுமையாக அனுபவித்து விட்டு விடுதலையானார்கள். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் பல்வேறு உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பொருட்கள் எல்லாம், வழக்கு விசாரணை பெங்களூரு தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதும், பெங்களூரில் உள்ள கருவூலத்திற்கு மாற்றப்பட்டன. தற்போது வழக்கு முடிவடைந்து, அனைவருக்கும் தண்டனைக் காலமும் முடிவடைந்து விட்டதால் கைப்பற்றி பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடமைகளை ஏலத்தில் விடக் கோரியிருந்தார் ஆர்டிஐ ஆர்வலரான நரசிம்ம மூர்த்தி என்பவர்.
இதுதொடர்பாக அவர் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் மனு செய்திருந்தார். அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், இந்தப் பொருட்களை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்குமாறும் இதற்காக சிறப்பு வழக்கறிஞரை நியமிக்குமாறும் கூறி உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் விரைவில் ஏலத்திற்கு வரும் என்று தெரிகிறது.
பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடம்
ஜெயலலிதாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும், சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பொருட்களைப் பாதுகாக்கும் பணியில் நான்கு காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஷிப்ட் முறையில் இவற்றை காவல் காத்து
வருகின்றனர்.
என்னென்ன பொருட்கள்?
ஜெயலலிதா பயன்படுத்திய 750 ஜோடி செருப்புகள், ஷூக்கள். 10,500 சேலைகள். இதில் 750 பட்டுச் சேலைகள் அடக்கம். ரூ. 3.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் தங்கம் ஆகியவை இந்த அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருட்கள் அனைத்தும் விரைவில் ஏலம் விடப்படும் என்று தெரிகிறது.
சசிகலா ஏலத்தில் எடுப்பாரா?
இந்த பொருட்கள் ஏலத்திற்கு வந்தால் அவற்றை ஏலத்தில் யார் எடுப்பார்கள் என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜெயலலிதா குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் எடுப்பார்களா என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா ஏலத்தில் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அல்லது அதிமுக தரப்பில் ஏலத்தில் எடுப்பார்களா என்றும் எதிர்பார்ப்பு உள்ளது.