"தாலி கட்ட நேரமாச்சே.. காரை விடு.. மெட்ரோவைப் பிடி".. பெங்களூரு புதுப் பெண்ணின் பலே ஐடியா!

Su.tha Arivalagan
Jan 28, 2024,06:08 PM IST

பெங்களூரு: மெட்ரோ ரயில்கள் எந்த அளவுக்கு பாப்புலர் என்பதற்கு பெங்களூரு மெட்ரோ மூலமாக ஒரு புதுமணப் பெண் நிரூபித்துள்ளார்.


மெட்ரோ ரயில்கள் நாட்டின் தலையெழுத்தை வேகமாக மாற்றி வருகின்றன. பெருநகரங்கள் அனைத்துமே சாலைப் போக்குவரத்தில் திக்கித் திணறிக் கொண்டுள்ளன. கட்டமைப்பு சிக்கல்கள், குறுகிய சாலைகள், அதிகரித்து விட்ட மக்கள் தொகை ஆகியவற்றால் சாலைப் போக்குவரத்து இடியாப்பச் சிக்கலாக மாறி வருகின்றன.


குறிப்பாக பெங்களூரு நகரில் சாலைப் போக்குவரத்து கிட்டத்தட்ட நரகத்திற்கு இணையானதாக மாறி விட்டது. ஒரு இடத்திலிருந்து எந்த நேரத்தில் கிளம்புகிறோம் என்பது மட்டுமே உறுதியானது.. மறு இடத்திற்கு எப்போது போய்ச் சேருவோம் என்பதை உறுதியாக கூற முடியாது. அந்த அளவுக்கு அங்கு போக்குவரத்து நெரிசல் மிக பயங்கரமாக இருக்கிறது.


இந்த நிலையில் பெங்களூரு மக்களுக்கு மெட்ரோ ரயில் மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல்களைத் தாண்டி அழகாக அலுங்காமல் குலுங்காமல் நினைத்து இடத்திற்குப் போக மெட்ரோ ரயில்கள் மிகப் பெரிய அளவில் உதவுகின்றன.




இந்த மெட்ரோ ரயிலின் முக்கியத்துவத்தை ஒரு புதுமணப் பெண் அட்டகாசமாக உணர்த்தியுள்ளதுதான் இப்போது அந்த ஊரில் வைரலாக உள்ளது. அதாவது கல்யாண முகூர்த்தத்திற்கு சரியான நேரத்தில் மண்டபத்திற்குப் போய்ச் சேர்வதற்காக, காரை விட்டு விட்டு மெட்ரோ ரயிலை அந்தப் பெண் தேர்வு செய்து சரியான நேரத்தில்  போய்ச் சேர்ந்து அசத்தியுள்ளார்.


வழக்கமாக மணப்பெண்ணையும், மணமகனையும் காரில்தான் அலங்காரமாக அழைத்து வருவார்கள். ஆனால் இப்போது இருக்கும் டிராபிக்கில் இப்படி காரில் ஜானவாசம் கூட்டி வந்தால் கல்யாண முகூர்த்தத்திற்கு கரெக்டாக வருவதற்கு வாய்ப்பே இல்லை ராஜா வாய்ப்பே இல்லை என்பதால் இந்தப் பெண் மெட்ரோவில் பயணிக்க முடிவு செய்தார். இதையடுத்து தனது பெற்றோர் உறவினர்களுடன், மெட்ரோவில் ஏறி தான் போக வேண்டிய இடத்திற்கு எந்த சிக்கலும் இல்லாமல் பத்திரமாக போயுள்ளார் இப்பெண்.




இந்தப் பெண் மெட்ரோவில் தனது  உறவினர்களோடு, மணப்பெண் அலங்காரத்தில் பயணிக்கும் வீடியோ வைரலாகி பலரது வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. பொண்ணு ரொம்ப புத்திசாலிதான்.. இவ்வளவு தெளிவா இருக்கே.. இவரை கட்டிக்கப் போவறவர் செம பாக்கியவான் என்று பலரும் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.


இனிமேல் கட்டப்படும் கல்யாண மண்டபங்களை பேசாமல் மெட்ரோ நிலையங்களுக்கு பக்கத்திலேயே கட்டிரலாம்.. மாப்பிள்ளை, பொண்ணுங்களுக்கு அலைச்சல் மிச்சமாகும்.. மெட்ரோவுக்கும் வருமானம் கூடும்.. என்ன நாங்க சொல்றது!