பெங்களூரில் நிலைமை மோசம்.. கக்கூஸ் போய்ட்டு "ஃபிளஷ் அவுட்" கூட பண்ண முடியலையாம்!

Su.tha Arivalagan
Mar 09, 2024,08:09 PM IST
பெங்களூர்: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் மிகப் பெரிய தண்ணீர்ப் பஞ்சம் வரும் என்று முன்பே கணிக்கப்பட்டதுதான். ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவின் ஐடி தலைநகரம் தண்ணீருக்காக தத்தளித்துக் கொண்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

குடியிருப்பு வளாகங்கள், வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என எல்லா இடமும் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மிகக் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் மிகப் பெரிய சிக்கலை சந்தித்துள்ளன.



பெங்களூரில் நிலவும் மோசமான நிலை குறித்து ரெடிட்ட் தளத்தில் ஒருவர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது பகீர் என்று உள்ளது. அவர் கூறுகையில், கடந்த ஒரு மாதமாகவே தண்ணீர்  சரியாக வரவில்லை. நான் பிரஸ்டீஜ் பால்கன் சிட்டியில் குடியிருக்கிறேன். இப்போது நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. சுத்தமாக இங்கு குடியிருக்க முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. பகலில்  தண்ணீர் சுத்தமாக கிடையாது. இரவில் தான் கொஞ்சம் வருகிறது . அதுவும் கூட கலங்கலாக உள்ளது. அதை வைத்து எதுவுமே செய்ய முடியாது. டாய்லெட்டுகளில் ஃபிளஷ் அவுட் கூட செய்ய முடியாமல் அவை நாறிப் போய்க் கிடக்கின்றன. பலர் அருகாமையில் உள்ள போரம் மாலுக்குப் போய் தேவையானதை செய்து அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அபார்ட்மென்ட் வாங்காதீங்க.. பலரும் புலம்பல்

பலர் ஏன்டா அபார்ட்மென்ட்டில் வீடு வாங்கினோம் என்று புலம்பி வருகிறார்களாம். மாதா மாதம் இஎம்ஐ கட்டும் தொல்லை ஒரு பக்கம் இருக்க, மற்றொருபுறம் இப்போது   தண்ணீர்ப் பிரச்சினையில் சிக்கி பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள்தான்.  தயவு செய்து வீடு வாங்குவதாக இருந்தால் தனி வீடாக வாங்குங்கள் இல்லாவிட்டால் இடத்தை வாங்கிக் கட்டிக்  கொள்ளுங்கள். அடுக்குமாடிக் குடியிருப்பில் மட்டும் வீடு வாங்காதீர்கள் என்று பலரும் சமூக வலைதளங்களில் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

பலர் என்ன செய்கிறார்கள் என்றால் ஜிம்முக்குப் போகும்போது கூடவே துணி, துண்டோடு செல்கிறார்களாம். ஜிம்மில் உடற்பயிற்சி செய்து விட்டு அப்படியே குளித்து முடித்து விட்டே வந்து விடுகிறார்களாம்.  பல லட்சம் செலவு செய்து வீட்டை வாங்கி கடைசியில் கக்கூஸுக்குக் கூட நிம்மதியாகப் போக முடியவில்லை. இதற்கு பேசாமல் சில ஆயிரம் கொடுத்து  தனி வாடகை வீட்டில் இருந்து கொள்ளலாம்.. குறைந்தது ஏதாவது தண்ணீர் கிடைத்து தப்ப முடிந்திருக்கும் என்பதே பலரின் வருத்தமாக உள்ளது.



காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெரும் வறட்சி நிலவுகிறது. பெங்களூரிலும் நிலத்தடி நீர் வெகுவாக இறங்கி விட்டது. இதனால்தான் பெங்களூர் மக்கள் தண்ணீர்ப் பஞ்சத்தை சந்திக்க நேரிட்டுள்ளதாக சொல்கிறார்கள். பெங்களூர் தண்ணீர்ப் பிரச்சினையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.