ராத்திரி கெஸ்ட் தங்கக் கூடாது.. பால்கனியில் உலாத்தக் கூடாது.. அபார்ட்மென்ட் பரிதாபங்கள்!

Su.tha Arivalagan
Mar 28, 2023,03:45 PM IST
பெங்களூரு: பெங்களூரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில்  உள்ள வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் போட்டுள்ள கடுமையான விதிமுறைகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. சமூக வலைதளங்களில் இந்த விதிமுறைகள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன.

வீட்டு உரிமையாளர்களுக்கும், வாடகைதாரர்களுக்கும் நல்லதொரு அனுபவம் கிடைக்கவே இந்த கடுமையான விதிமுறைகள் என்று அந்த குடியிருப்பாளர் நலச் சங்கம் கூறினாலும் கூட இதெல்லாம் ரொம்ப ஓவருங்க என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.



பெங்களூரு குண்டலஹள்ளி கேட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் இந்த கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. வாடகைதாரர்கள் குறிப்பாக பேச்சலர்கள், தனியாக வசிப்போர்  இரவு 10 மணிக்கு வீடுகளுக்கு விருந்தினர்களை அழைத்து வரக் கூடாதாம்.  இதுபோன்ற சூழல் ஏற்பட்டால், அதாவது ராத்திரியில் விருந்தினர்கள் தங்க வேண்டி வந்தால் முதலிலேயே வீட்டு உரிமையாளருக்கு இமெயில் மூலம் தகவல் கூறி முன் அனுமதி பெற வேண்டுமாம்.

அனுமதி பெறுவதற்கும் விதிமுறைகள் உள்ளன. அதாவது விருந்தினர்களின் புகைப்பட அடையாள அட்டை தாக்கல் செய்யப்பட வேண்டுமாம்.  அவர் எவ்வளவு நாட்கள் தங்குவார் என்ற விவரமும் தெரிவிக்கப்பட வேண்டுமாம்.

இதுபோன்ற விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். மீறினால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் அல்லது அவர்கள் வீட்டை விட்டு காலி செய்யப்படுவார்களாம்.

இதுதவிர ராத்திரி 10 மணிக்கு மேல் டிவி, ரேடியோவை சத்தமாக வைக்கக் கூடாது. வீட்டில் ராத்திரியில் பார்ட்டி நடத்தக் கூடாது. ராத்திரி 10 மணிக்கு மேல் பால்கனி, காரிடாரில் நின்றபடி போன் பேசக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் நீளுகின்றன. என்ன கொடுமை என்றால் ராத்திரி பத்து மணிக்கு மேல் பேச்சலர்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு வாட்ச்மேன் வந்து சோதனை போடுவதுதான் மிகப் பெரிய கொடுமையாகும்.

இந்த கடுமையான  கேலிக்கூத்தான விதிமுறைகளை சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.