வங்கதேசத்தில் பயங்கரம்.. ஏரியில் பிணமாக மிதந்த.. 32 வயதேயான இளம் பெண் பத்திரிகையாளர்!

Su.tha Arivalagan
Aug 28, 2024,06:48 PM IST

டாக்கா: நிலையான அரசு இல்லாமல் இடைக்கால அரசின் தலைமையில் இயங்கி வரும் வங்கதேசத்தில், இளம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஏரியில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.


அந்தப் பெண் பத்திரிகையாளரின் பெயர் சாரா ரஹ்னாமா. 32 வயதான அவர் காஸி டிவி என்ற தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கோலம் தஸ்தகிர் காஸி என்பவருக்குச் சொந்தமான டிவி இது. வங்கதேசத்தில் மக்கள் புரட்சி வெடித்து ராணுவத்தின் துணையுடன் இடைக்கால அரசு அமைந்ததும் காஸி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் சாராவின் மரணம் வந்துள்ளது.


டாக்காவில் உள்ள ஹதிர்ஜீல் ஏரியில் அவரது உடல் பிணமாக மிதந்தது. சாகர் என்ற இளைஞர் இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கவே போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டனர்.




இது மேலும் ஒரு கொடூரமான மரணம், ஜனநாயகத்தின் மீதும், கருத்து சுதந்திரத்தின் மீதும் நடந்துள்ள மோசமான தாக்குதல் என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஸத் கூறியுள்ளார்.


தனது மரணத்திற்கு முதல் நாள்தான் சாரா ஒரு பேஸ்புக் பதிவைப் போட்டிருந்தார். பாஹிம் பைசல் என்பவரை டேக் செய்து அவர் போட்டிருந்த அந்தப் பதிவில், உன்னைப் போன்ற நல்ல நண்பன் கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. உன்னை கடவுள் எப்போதும் ஆசிர்வதிக்கட்டும். உனது கனவுகள் விரைவில் நனவாகும் என்று நம்புகிறேன்.  இருவரும் இணைந்து நிறைய திட்டமிட்டிருந்தோம். ஆனால் நமது திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. உன்னை கடவுள் ஆசிர்வதிப்பார் என்று எழுதியிருந்தார் சாரா.


இன்னொரு பதிவில், வாழ்வதை விட சாவதே சிறந்தது என்று எழுதியிருந்தார் சாரா. இதை வைத்து அவர் தற்கொலை மூலம் தனது உயிரை முடித்துக் கொண்டிருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம், சாரா கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்