இந்துக்களுக்கு பாதுகாப்பு.. பிரதமர் மோடிக்குப் போன் போட்டு உறுதியளித்த வங்கதேச முகம்மது யூனுஸ்!

Su.tha Arivalagan
Aug 16, 2024,04:28 PM IST

டெல்லி: வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். 


பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த தொலைபேசிப் பேச்சின்போது வங்கதேசத்தில் வசிக்கும் இந்து சமுதாயத்தினர் மற்றும் பிற மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று முகம்மது யூனுஸ் உறுதி அளித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.




வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சி ஆட்சி நடந்து வந்தது. அக்கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா பிரதமராக இருந்து வந்தார். ஆனால் இட ஒதுக்கீடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மேலும் ஷேக் ஹசீனா மீதான நீண்ட கால வெறுப்புணர்வும், அதிருப்தியும் மக்கள் புரட்சியாக வெடிக்கவே பெரும் வன்முறை மூண்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஷேக் ஹசீனாவின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.


இதையடுத்து தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு பெற்றவரான பேராசிரியர் முகம்மது யூனுஸ் உள்ளார். மாணவர் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அரசு தற்போது ராணுவத்தின் துணையோடு ஆட்சி நடத்தி வருகிறது. எப்போது நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரியவில்லை.


இந்த நிலையில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கும், பிற மதச் சிறுபான்மையினருக்கு எதிரவாகவும் பெரும் தாக்குதல் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகின. இதனால் இந்திய அரசு கவலை கொண்டது. மேலும் சர்வதேச அளவிலும் இது விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. இந்தப் பின்னணியில்தான் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகம்மது யூனுஸ் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.


இதுகுறித்து பிரதமர் மோடி போட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: பேராசிரியர் முகம்மது யூனுஸிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரப் பெற்றேன். தற்போதைய நிலவரம் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். ஜனநாயக, ஸ்திரத்தன்மை கொண்ட, அமைதியான, வளர்ச்சியான வங்கதேசம் அமைய இந்தியாவின் ஆதரவு இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினேன். வங்கதேசத்தில் வசிக்கும், இந்துக்கள், பிற சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புஉறுதி செய்யப்படும் என்று உறுதி அளித்தார் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்