பழனி கோவில்.. கொடிமரம் தாண்டி.. இந்து அல்லாதவர்கள் நுழைய தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை

Meenakshi
Jan 30, 2024,02:04 PM IST

திண்டுக்கல்: இந்து அல்லாதவர்கள் பழனி கோவிலில் உள்ள கொடிமரம் தாண்டி உள்ளே நுழையக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், இந்து அல்லாதவர்கள் பழனி மலை முருகன் கோவில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். அந்த மனுவில், பழனி முருகன் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலை இந்து சமய அறநிலை துறை பராமரித்து வருகிறது. இந்து சமய அறநிலை துறை ஆலய நுழைவு விதி 1947 ஆம் ஆண்டின் படி இயற்றப்பட்ட சட்டத்தில், இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோவிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது. 




இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது.  இவ்வாறு உள்ள சூழலில் பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத நபர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது. இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது.


எனவே பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உப கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை  என்ற பதாகைகளை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 


இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த நீதிபதி எஸ். ஸ்ரீமதி, நீக்கப்பட்ட பதாகையை மீண்டும் வைக்கவும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்திருந்தார். இரு தரப்பினரும் தங்கள் வாதங்களை நீதிபதி முன் வைத்தனர். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். 


இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி இன்று வழங்கினார். அதில், இந்து அல்லாதவர்கள் கோயிலின் கொடி மரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதே போல் மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோயிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும் என்றும், அந்த பதிவேட்டில் இந்து சுவாமி மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உறுதிமொழி எழுதிக் கொடுத்த பின்பு கோயிலுக்கு அனுமதிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.