லோக்சபா தேர்தல் 2024: வாக்குப் பெட்டிகளுக்கு தீவிர பாதுகாப்பு.. Strong room-களுக்கு சீல் வைப்பு!

Meenakshi
Apr 21, 2024,08:55 AM IST

சென்னை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகள்  வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள Strong room-களில் வைக்கப்பட்டு அந்த அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணி வரை நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, வாக்கு என்னும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை மாவட்டத்தை பொருத்தவரை வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு பெட்டிகள் லயோலா கல்லூரி வளாகத்திலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்கு பெட்டிகள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும் வைக்கப்பட்டுள்ளன.




ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளது. அதுவரை சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்ட்டுள்ளது. அறைக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அறைக்கு 2 பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டுள்ளது. யாரும் உள்ளே போக முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை தேர்தல் அதிகாரி டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரம் கண்காணிக்கப்படும். தடையில்லா மின்சார சேவையும் வழங்கப்பட உள்ளது. மேலும், அரசு சார்பில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு இருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களும் இரவு பகலாக ஷிப்ட் போட்டு கண்காணித்தும் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.