ஒலிம்பிக்ஸ் 2024: முதல் போட்டியிலேயே அதிரடி.. அபார வெற்றியைப் பெற்றார் பி.வி. சிந்து

Su.tha Arivalagan
Jul 28, 2024,01:36 PM IST

பாரீஸ்:  பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின்  முதல் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து சூப்பரான வெற்றியைப் பெற்றுள்ளார்.


பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா பல்வேறு போட்டிகளில் மெல்ல மெல்ல வெற்றிகளைப் பதித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான பி.வி. சிந்து பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றியுடன் தனது வேட்டையைத் தொடங்கியுள்ளார்.




பி.வி. சிந்துவும், மாலத்தீவு வீராங்கனை பாத்திமா நபா அப்துல் ரஸ்ஸாகும் முதல் சுற்றுப் போட்டியில் மோதினர். இதில் பாத்திமாவை பிரமாதமாக வீழ்த்தி வெற்றி பெற்றார் சிந்து. இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பி.வி. சிந்து அபார வெற்றியைப் பதிவு செய்தார். சிந்துவின் அதிரடிக்கு முன்பு மாலத்தீவு வீராங்கனை நிறையவே தடுமாறினார்.


இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர் சிந்து. அந்த வகையில் அவரது முதல் வெற்றியே முத்திரை பதிப்பதாக அமைந்துள்ளது இந்தியர்களை மகிழ்வித்துள்ளது.