இது ஐந்தாவது மாதம்.. கன்னிகா சினேகனுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு விழா!

Manjula Devi
Oct 19, 2024,03:11 PM IST

சென்னை:   நடிகை கன்னிகாவிற்கு இன்று ஐந்தாவது மாத வளைகாப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இதற்கான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


கடந்த 1997ம் ஆண்டு  வெளியான புத்தம் புது பூவே என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  பாடலாசிரியராக அறிமுகமானவர் தான் சினேகன். இதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான  பாண்டவர் பூமி படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும்  சினேகன் எழுதியிருந்தார். இப்படத்தின் பாடல்கள் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. 




குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,தோழா தோழா கனவு தோழா என்ற பாடல்கள் சூப்பர் ஹிட் பெற்றதுடன் இப்படத்தின் பாடலாசிரியர்  யார் என கேட்கும் அளவிற்கு அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்த பாடல்கள் இன்று வரை மக்கள் முனுமுனுக்கும் பாடல்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இவர் இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் பலருக்கும் பரிச்சயம் ஆனார்.


இதனை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் சிறுசிறு கதாபாத்திரத்திலும் நடித்து நடிகராகவும் பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார் சினேகன்.  மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். சீரியல் தொடர்களில் நடித்து வந்த நடிகை கன்னிகா ரவியை காதலித்து உலக நாயகன் கமலஹாசன் தலைமையில் திருமணம் செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.




இதற்கிடையே நடிகர் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் கழித்து தற்போது தான் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளதாக கடந்த சில இடங்களில் தினங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து  ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.


இந்த நிலையில் கன்னிகாவிற்கு ஐந்தாவது மாத வளைகாப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இதற்கான புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்ட இந்த தம்பதிகளுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்