புன்னகை பூத்த பால ராமர்.. கோலகலமாக முடிவடைந்த பிரான பிரதிஷ்டை விழா.. பிரதமர் மோடி பூஜை!

Meenakshi
Jan 22, 2024,12:38 PM IST

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.


நின்ற கோலத்தில் உள்ள பால ராமர் சிலை பார்க்கவே படு ஜோராக இருக்கிறது. சிலை பிரதிஷ்டை முடிந்ததும் முதல் பூஜையை பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார். இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




நாடு முழுவதிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். கோவில் திறப்பு விழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்ட அளவில் தயார் செய்யப்பட்டிருந்தது. மாலைகள், தோரணங்கள் என கோவில் வளாகம் முழுவதும் களைகட்டியிருந்தன.


உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டபட்டது. இக்கோவில் கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இன்று பால ராமர் சிலையையும் அவரே பிரதிஷ்டை செய்து சிறப்புப் பூஜைகளையும் நடத்தினார்.




7000த்திற்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினார்கள் இதில் கலந்து கொண்டனர். கோவில் கருவறையில் காலை 11.30 மணிக்கு பூஜைகள் தொடங்கின. 12.15 மணியில் இருந்து 12.45 மணிக்குள் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.


ராமர் பிரதிஷ்டை முடிந்தவுடன் பிரதமர், மற்றும் முக்கிய தலைவர்கள் உரை நிகழ்த்தவுள்ளனர். அதன் பின்னர் ராமரை வழிபட முக்கிய பிரமுகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 200 டன் மலர்களால் ராமர் கோவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் கருவறை தங்கத்தில் செய்யப்பட்ட மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு கோவில் முழுவதிலும் 10 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்கு ஏற்றப்பட உள்ளது.