அதிக தியேட்டர்கள்.. ஆரவார ரிலீஸ்.. கலக்கப் போகும் அயலான்.. சிவகார்த்திகேயன் ஹேப்பி அண்ணாச்சி!

Su.tha Arivalagan
Nov 23, 2023,02:55 PM IST

சென்னை: சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அயலான் திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான நாடுகள், தியேட்டர்களில் அயலான் திரைப்படம் திரையிடப்படவுள்ளதாம்.


சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் மிகப்பிரமாண்டமான ரிலீசுக்கு தயாராகிவிட்டது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று படம் திரைக்கு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு சிவகார்த்திகேயனின் இந்த படம் அதிகளவிலான நாடுகளில் அதிக அளவிலான தியேட்டர்களில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.


சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங், சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகி பாபு, பால சரவணன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள அயலான் திரைப்படத்தை கே. ரவிக்குமார் எழுதி இயக்கியுள்ளார். இது ஒரு சயின்ஸ் பிக்சன் படமாகும். 2016 ஆம் ஆண்டு இந்த படம் அறிவிக்கப்பட்டது. 2018  முதல் 2021 ஆம் ஆண்டு வரை படப்பிடிப்பு நடைபெற்றது. படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதற்கு காரணம், படம் முழுக்க முழுக்க சயின்ஸ் பிக்சன் படம் என்பதால். ஏகப்பட்ட கிராபிக்ஸ் ஒர்க் வேலைகள் இருந்ததால் படம் வெளி வருவதற்கு இத்தனை காலம் எடுத்துக் கொண்டுவிட்டது.




முன்னதாக இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வந்திருக்க வேண்டும். ஏற்கனவே அப்படிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகளுக்காகவும், கிராபிக்ஸ் ஒர்க்குகளுக்காகவும் தாமதமானதால் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு கொண்டு சென்றுவிட்டனர். படம் இப்பொழுது பக்காவாக தயாராகி தயாராகி விட்டதால் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். 


இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார், நிரவ் ஷா கேமராவை கையாண்டுள்ளார், ரூபன் எடிட்டிங் வேலையை பார்த்துள்ளார். இந்த படத்தில் கிட்டத்தட்ட 5,000 விஷுவல் எபெக்ட்ஸ் ஷாட்ஸ் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய படம் ஒன்றில் அதிக அளவிலான விசுவல் ஷாட்ஸ் இடம் பெறுவதே இதுவே முதல் முறையாம். அந்த வகையில் அயலான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த படத்தின் இயக்குனர்  ரவிக்குமார் ஏற்கனவே இன்று நேற்று நாளை என்ற ஒரு படத்தை இயக்கியவர். அந்த படம் நன்கு பேசப்பட்டது. வித்தியாசமான கதை அமைப்புடன் வந்த அந்த படத்தை தொடர்ந்து இப்பொழுது அயலான் படத்தை ரவிக்குமார் இயக்கி உள்ளார். இந்த படமும் வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது நினைவிருக்கலாம். படம் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக கலக்கும் என்று எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உள்ளனர்.