வாங்க வாங்க எங்க ஸ்கூல்ல வந்து சேருங்க.. பேரணியாக போன மாணவர்கள்.. செம ஸ்டிராட்டஜில்ல!

Manjula Devi
Mar 17, 2024,10:34 AM IST

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை ஆர்டிஓ பால்துரை கொடியசைத்து  துவங்கி வைத்தார்.


ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொள்வது வழக்கம். இதில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை  பள்ளிகள் உருவாக்க உள்ளது என்பது தொடர்பான பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்படும்.




இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணியாகவே நடத்தி அசத்தி விட்டனர். இந்தப் பேரணியை தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை கொடியசைத்து துவங்கி வைத்தார். 


நிகழ்வில் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்து, ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், பாரதி, மற்றும் ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர். தேவகோட்டையில் உள்ள முக்கிய வீதிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மாணவ மாணவியர் பேரணி சென்றனர். 




பேரணியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  பயிலும் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்,  எண்ணும் எழுத்தும் திட்டம் , மாணவிகளுக்காக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை, வாசிப்புத் திறனை வளர்க்க தேன் சிட்டு எனும் சிற்றிதழ், வினாடி-வினா போட்டி, திரைப்பட விழாக்கள், இலக்கிய மன்ற செயல்பாடுகள் உட்பட பல்வேறு நலன்களை எடுத்துக் காண்பித்து பெற்றோர்கள்  மற்றும் மாணவர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இந்நிகழ்வின் இறுதியில் பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான சீருடைகள் மற்றும் புத்தகங்களை கோட்டாட்சியர்  பால்துரை வழங்கினார்.