Aval: முதியவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் சென்னை போலீஸ்!

Su.tha Arivalagan
Nov 03, 2023,10:01 AM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: சென்னை காவல்துறை பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு உதவி செய்வதற்காக இலவச 14567 என்ற ஹெல்ப்லைன் சேவையை தொடங்கியுள்ளது.


Aval என்ற பெயரிலான, இந்த ஹெல்ப்லைன் சேவை மூலமாக முதியவர்களுக்கு எந்த வகையான உதவி தேவைப்பட்டாலும் 14567 என்ற எண்ணில்  தொடர்பு கொண்டு கேட்கலாம் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.


தற்போது வேலைக்காக வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் செல்லும் பிள்ளைகளால் முதியவர்கள் தனிமையில் வாழும் நிலை இயல்பாகி வருகிறது. பெரும்பாலான வீடுகளில் முதியவர்களுக்கு உதவி செய்யக் கூட ஆட்கள் இல்லாத நிலையும் காணப்படுகிறது.




மருந்துவம், மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கு  துணை இல்லாமல்  தவிப்பவர்கள் பலர். இதனால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் தனிமையில் வசிக்கும் முதியோர்களிடம் பணம் மற்றும் நகை பறித்தல், பண மோசடி செய்தல், கொலைகள் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன. இதனை தடுக்க காவல்துறையினர் கண்காணிப்பு குழு அமைத்து ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க பல்வேறு திட்டங்களை வகுத்து வந்தது.


மூத்த குடிமக்களின் நலனுக்காக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது. ஆதரவற்ற முதியோர் இல்லம், முதியோர் பாதுகாப்பகம், மருத்துவம், ஓய்வூதியம், பயணகட்டணச் சலுகை, பேருந்து வசதிகள், போன்ற பல்வேறு உதவிகளை அரசு இலவசமாக செய்து வருகிறது.


இந்த வரிசையில் சென்னை காவல்துறை முதியவர்களுக்கு உதவ களம் இறங்கியுள்ளது. தனிமையில் உள்ள முதியவர்களுக்கு இந்த சேவை மிகப்பெரிய உதவியாக இருக்கும். எப்போது  உதவி தேவைப்பட்டாலும் அப்போது உதவிக்கரம் நீட்ட  காவல்துறை நண்பன் உள்ளது என்பது முதியவர்களுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும்.