"24 மணி நேரம் டைம்.. ஏவி ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்".. திரிஷா நோட்டீஸ்!

Meenakshi
Feb 22, 2024,07:25 PM IST

சென்னை: நடிகை திரிஷா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி நடிகை திரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 


சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ.  சமீபத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகை திரிஷா குறித்து அபத்தமாகவும், அவதூறாகவும் பேசினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ராஜு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.




தற்போது நடிகை திரிஷா தரப்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக திரிஷாவின் வக்கீல்கள் அனுப்பியுள்ள நோட்டீஸில், அடுத்த 24 ணி நேரத்திற்குள் முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் எழுத்து வடிவில் இருக்கும் அத்தனை அவதூறுகளையும் நீக்க வேண்டும்.


ஏ.வி.ராஜு மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். 4 நாட்களுக்குள் இதுகுறித்து பதில் அளிக்குமாறும், திரிஷாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.