"அடல்"  பாலத்தில் விர்ரென்று பறந்த.. "ஆட்டோ".. "எப்புர்ரா"... கேள்விக்கனைகளால் துளைத்த மக்கள்!

Su.tha Arivalagan
Jan 16, 2024,06:28 PM IST

மும்பை: மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்த அடல் பிஹாரி வாஜ்பாய் அடல் சேது பாலத்தில் ஆட்டோக்கள், டூவீலர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆட்டோ ஒன்று விர்ரென்று போன புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து இதை எப்படி காவல்துறை அனுமதித்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


மும்பையில் கடல் மீது கிட்டத்தட்ட 21.8 கிலோமீட்டர் தொலைவுக்கு அதி நவீன பாலம் கட்டப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் இந்தப் பாலத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம்தான் இந்தியாவிலே மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமைக்குரியது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில்தான் இதைத் திறந்து வைத்தார்.




இந்தப் பாலத்தில் எல்லா வாகனங்களும் செல்ல முடியாது. குறிப்பாக டூவீலர்கள், ஆட்டோ ரிக்ஷா, டெம்போ, டிராக்டர், மாட்டு வண்டிகள், மெதுவாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில்தான் இந்தப் பாலத்தில் பயணிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதை விட முக்கியமாக இந்தப் பாலத்தில் செல்ல டோல் கட்டணமும் அதிகமாகும். 


இப்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்தப் பாலம் திறக்கப்பட்டாலும் கூட விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்டு தடை செய்யப்பட்ட வாகனங்களும் இதில் போவதாக புகார் எழுந்துள்ளது.  இந்த நிலையில்தான் ஆட்டோ ரிக்ஷா ஒன்று இந்தப் பாலத்தின் மீது ஜம்மென்று போன காட்சியை சிலர் படம் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.


சரவணன் ராதாகிருஷ்ணன் என்பவர் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்து பலரும் இதுகுறித்து மும்பை காவல்துறையை டேக் செய்து கேள்வி கேட்டு வருகின்றனர். சில குசும்பர்கள் இந்த ஆட்டோவுக்கு "ஆட்டோ சேது" என்றும் பெயர் வைத்துள்ளனர். போட்டோஷூட்டுக்காக இந்த ஆட்டோ பாலத்தின் மீது போனதா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


கிட்டத்தட்ட ரூ. 17,840  கோடி செலவில், கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் மூலமாக செல்லும் வாகனங்கள், மும்பையிலிருந்து நவி மும்பை பகுதிக்கு 20 நிமிடத்தில் போய் விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


நல்லவேளை இந்த ஆட்டோவுக்கு இன்னும் யாரும் "Sea on" சேது என்று பெயர் வைக்கலை!