சீக்கியர்கள் கிர்பான் வைத்திருப்பதை தடை செய்த சட்டம் செல்லாது.. ஆஸி. கோர்ட்

Su.tha Arivalagan
Aug 05, 2023,01:24 PM IST
மெல்போர்ன்: சீக்கிய மாணவர்கள் பள்ளிக் கூடங்களுக்கு கிர்பான் கத்தியுடன் வருவதைத் தடை செய்யும் சட்டம், சட்ட விரோதமானது என்று ஆஸ்திரேலிய கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாகாணத்தில் சீக்கிய மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வரும்போது கிர்பான் கத்தியைக் கொண்டு வரக் கூடாது என்று தடை விதித்து சட்டம் இயற்றியிருந்தது. கிர்பான் கத்தி என்பது சீக்கியர்களின் மத அடையாளங்களில் ஒன்று. தலைப்பாகை அணிவது, கிர்பான் கத்தி வைத்திருப்பது, தாடி வளர்ப்பது ஆகியவை சீக்கியர்களின் கடமைகளில் சில. 

குவீன்ஸ்லாந்து அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து கமல்ஜித் கவுர் அத்வால் என்பவர் கடந்த ஆண்டு கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதில், சீக்கியர்களின் ஐந்து மத அடையாளங்களில் ஒன்றுதான் கிர்பான். இந்த ஐந்து அடையாளங்களையும் எப்போதும் கூடவே வைத்திருக்க வேண்டும் என்பது எங்களுக்கு இடப்பட்டுள்ள மதக் கட்டளையாகும். எனவே இந்த சட்டமானது எங்களது மத உரிமையில் தலையிடுவதாக உள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த க்வீன்ஸ்லாந்து கோர்ட் தற்போது இந்த சட்டமானது, அரசியல்சாசனத்திற்கு புறம்பானது என்று கூறி  அதைச் செல்லாது என்று அறிவித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு ஆஸ்திரேலிய சீக்கியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.