"ஏன்டா என்னோட உருளைக்கிழங்கு சிப்ஸை சாப்பிட்டே".. காதலனை காரை விட்டு ஏற்றிய பெண்!

Su.tha Arivalagan
Mar 01, 2023,05:14 PM IST
அடிலைட்: ஆஸ்திரேலியாவின் அடிலைட் நகரில், தனது சிப்ஸை எடுத்து காதலன் சாப்பிட்டு விட்டதால் ஆத்திரமடைந்த பெண், காரை விட்டு காதலனை ஏற்றி படுகாயப்படுத்தி விட்டார். 

காரில் சிக்கி காயமடைந்த நபரின் பெயர் மாத்யூ பின். இவரது காதலி சார்லேட் ஹாரிசன். இவருக்கு 42 வயதாகிறது. மாத்யூ பின் கொடுத்த புகாரின் பேரில் அந்தப் பெண்ணைக் கைது செய்த போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது மாத்யூ கொடுத்த வாக்குமூலம் இதுதான்:



பிப்ரவரி 26ம் தேதி நானும் எனது காதலியும் அவரது காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். இருவரும் சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கி வைத்திருந்தோம். எனது சிப்ஸ் தீர்ந்து போய் விட்டதால், அவருடைய சிப்ஸைக் கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு விட்டேன். அவ்வளவுதான் சார்லட் கோபமடைந்து விட்டார்.

உடனே வேகமாக என்னை கீழே தள்ளி விட்டு காரை விட்டு ஏற்றி விட்டார். அதிர்ஷ்டவசமாக நான் காயத்துடன் உயிர் தப்பினேன் என்று கூறினார் மாத்யூ பின். ஆனால் இந்தப் புகாரை சார்லட் மறுத்தார். நான் வேண்டும் என்றே அவர் மீது காரை ஏற்றவில்லை. அது ஒரு விபத்து. கார் அவர் மீது ஏறியதும் உடனடியாக நான்தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.  ஆனால் அவர் என்னை சரமாரியாக அடித்ததால் நான் காரை நிறுத்தி விட்டேன். அதன் பிறகே அவராக மருத்துவமனைக்குச் சென்றார் என்று கூறியுள்ளார் சார்லட்.

இரு தரப்பு விசாரணைக்குப் பின்னர் சார்லட்டை வீட்டுக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவருக்கு ஜாமீன் கிடைத்தால் வீட்டை விட்டு வெளியில் செல்ல அவருக்கு அனுமதி கிடைக்கும்.