நகை சேர வேண்டுமா.. சொத்து சேரணுமா?.. எதை வாங்க வேண்டும் என்றாலும் இந்த நாளை சூஸ் பண்ணுங்க!

Manjula Devi
Jul 02, 2024,10:47 AM IST

நீங்க கேலண்டர்ல ராகு காலம், எமகண்டம் நல்ல நேரம், கௌரி நல்ல நேரம், போன்ற நேரங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் குளிகை காலம் என ஒன்று இருக்கும். அதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா..  எதற்காக அந்த நேரம் சொல்லப்படுகிறது. அதில் என்ன காரியங்களை செய்யலாம். அதனால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.


பொதுவாகவே நம் நாட்டில் சுப காரியங்கள் என்றாலே அதை செய்வதற்கு சரியான கௌரி நேரம் அல்லது நல்ல நேரத்தை  மக்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம். அதேபோல் ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களில் திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட பல சுப காரியங்களை செய்ய மாட்டார்கள். இந்த நேரங்களில் சுப காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ஜோதிட ரீதியாக சொல்லப்படுகிறது. இதனால் சுப காரியங்களை நல்ல நேரத்தில் செய்வது தான் சிறந்து விளங்கும் என மக்கள் ஆணித்தனமாக நம்பி வருகின்றனர். 




அதே போல் இன்னொரு சூப்பரான காலமும் உள்ளது. அதுதான் குளிகை காலம்.. இந்த குளிகை காலத்தில் சுப காரியங்களை செய்தால் அது திரும்பத் திரும்ப நிகழுமாம். அப்படி ஒரு ஸ்பெஷலான காலம் அது.


குளிகை நேரம் என்றால் என்ன: 


குளிகை நேரம் தினமும் காலை இரவு என இரண்டு நேரம் வரும். அதுவும் தினமும் வரும் நல்ல நேரம் முடிந்த பிறகு, ஒன்றரை மணி நேரம் நடைபெறும். இந்த நேரத்தில் செய்யப்படும் எந்த சுப காரியங்களும் தொடர்ந்து நடைபெறும். அதாவது குளிகை நேரத்தில் ஒரு நல்ல காரியம் செய்தால், அதேபோல் திரும்ப திரும்ப நடைபெறும் என்று நம்பிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. 


யார் இந்த குளிகன்? 




குளிகன் என்ற மாந்தன், சனீஸ்வரன்- ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வன் என்கிறது புராணம். குளிகனுக்கு, மாந்தி என்ற தங்கையும் உண்டு. குளிகனின் தாயார் ஜோஷ்டா தேவி,  தவ்வை என்ற தமிழ் பெயரால் அழைக்கப்படுகிறார்.


குளிகை நேரத்தில் எந்த சுப காரியங்கள் செய்யலாம்?: 


இந்த குளிகை காலத்தில் வீடு கட்டுவது, வீடு கட்டி முடித்து கிரகப்பிரவேசம் செய்வது, கடனை அடைப்பது, சொத்து வாங்குவது, நகை வாங்குவது, போன்ற சுப காரியங்கள் செய்யலாம். இந்த சுப காரியங்கள் அனைத்தும் குளிகை நேரத்தில் செய்தால் மீண்டும் இதே போன்ற சுப காரியங்கள் வளர்ந்து கொண்டே போகும் என்பது ஐதீகம்.

 

சரி குளிகை நேரத்தில் என்ன சுப காரியங்கள் செய்யக்கூடாது?




கடன் வாங்குவது, வீட்டிற்கு மராமத்து பணிகளை செய்வது, திருமணம் செய்வது பெண் பார்ப்பது, அறுவை சிகிச்சை செய்வது, குழந்தை பெற்றெடுப்பது போன்ற சுப காரியங்களை குளிகை காலத்தில் செய்யக்கூடாது. ஏனெனில் திருமணம் என்பது நம் வாழ்வில் ஒரு முறை தான் நடைபெற வேண்டும். அது ஆயிரம் காலத்துப் பயிர் என்று நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. இதை குளிகை நேரத்தில் செய்யக்கூடாது. 


திருமணம், பெண் பார்ப்பது போன்ற சுப காரியங்களை குளிகை நேரத்தில் செய்வதை தவிர்த்து, நல்ல நேரத்தில் செய்ய வேண்டும். அப்போதுதான் திரும்பத் திரும்ப நிகழாமல் இருக்கும். அதேபோல் குளிகை நேரத்தில் கடன் வாங்குதல் கூடாது.ஏனெனில் திரும்ப கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். அதனால் குளிகை நேரத்தில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.


இது தவிர குளிகை நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் மீண்டும் நம் உடல் நிலை பாதிக்கப்பட்டு திரும்பத் திரும்ப அறுவை அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படலாம். அதனால் நல்ல நேரங்களில் இது போன்ற காரியங்களை செய்யலாம்.