ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞரை நியமித்தது கர்நாடக அரசு

Su.tha Arivalagan
Apr 07, 2023,12:03 PM IST


பெங்களூரு: மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட மூத்த வழக்கறிஞரை நியமித்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது பதவிக்காலத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சொத்துக்கள் குவித்ததாக கூறி வழக்குத் தொடரப்பட்டது. பல்வேறு வழக்குகள் ஜெயலலிதா மீது பாய்ந்தது.  சொத்துக் குவிப்பு வழக்கானது பெங்களூரு தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.


இந்த வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகா உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014ம்  4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த  தீர்ப்பை பின்னர் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அதற்குள் ஜெயலலிதா இறந்து விட்டார். இதனால் உச்சநீதிமன்றத்  தீர்ப்பின் அடிப்படையில், சசிகலா உள்ளிட்ட மற்ற மூவரும் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து விட��டு விடுதலையானரார்கள்.


சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவிடமிருந்து பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தங்க, வைர நகைகள், செருப்புகள், பட்டுச் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பொருட்கள் எல்லாம் பெங்களூரில் உள்ள மாவட்ட சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.


இந்தப் பொருட்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக கோர்ட்டில் நரசிம்ம மூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ஏலம் விடுவதற்கான நடைமுறைகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மூத்த வழக்கறிஞரும், பப்ளிக் பிராசிகியூட்டருமான கிரண் ஜாவளியை கர்நாடக அரசு நியமித்துள்ளது.


மொத்தம் 29 வகையான பொருட்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, 10,500 சேலைகள், 750 ஜோடி செருப்புகள், 500 ஒயின் பாட்டில்கள், 21.28 கிலோ தங்க நகைகள், 1250 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ. 2 கோடி மதிப்பிலான வைர நகைகள், வெள்ளி வாள், கைக்கடிகாரங்கள், 33 தொலைபேசிகள், 131 சூட்கேஸ்கள் உள்ளிட்ட பொருட்கள் விரைவில் ஏலம் விடப்படவுள்ளன. இவற்றை அதிமுக தரப்பில் ஏலத்தில் எடுத்து நினைவுக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.