தீர்க்க சுமங்கலி வரம் தரும் சக்தி வாய்ந்த காரடையான் நோன்பு

Aadmika
Mar 15, 2023,10:37 AM IST

சென்னை : வரலட்சுமி நோன்பிற்கு அடுத்தபடியாக திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் முக்கியமான விரதம் காரடையான் நோன்பு ஆகும். சுமங்கலி விரதம், கெளரி விரதம், மாங்கல்ய விரதம் என போற்றப்படும் இந்த விரதம், கணவர் நீண்ட ஆயுள் பெற வேண்டும் என்பதற்காக திருமணமான பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமாகும்.


தனக்கு ஏற்பட்ட தோஷம் காரணமாக அரச பதவி, நாடு, செல்வம், தாய்-தந்தைக்கு பார்வை என அனைத்தையும் இழந்து, காட்டில் வசிக்கிறான் சத்தியவான்.  கணவன் மீது தீராத பக்தியும், பாசமும் கொண்ட சாவித்ரிக்கு, கணவன் சத்தியவான் சிறிது நாட்களில் உயிரிழக்க போகிறான் என்பது தெரிய வருகிறது. இருந்தும் தனக்கு தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என அன்னை பராசக்தியிடம் வேண்டிக் கொண்டு, மிகக் கடுமையாக விரதம் இருக்கிறாள் சாவித்ரி. காட்டில் கிடைத்த அரிசி, காராமணி போன்ற பொருட்களை வைத்து கார அடை செய்து நைவேத்தியமாக படைத்து வருகிறாள்.




தனது கடுமையான விரதத்தின் பயனாக எமதர்மன் வந்து தனது கணவன் சத்தியவானின் உயிரை எடுத்துச்  செல்வது சாவித்ரியின் கண்களுக்கு தெரிகிறது. எமனை தடுத்து நிறுத்தி, தனது கணவரின் உயிரை திருப்பி தரும்படி கேட்கிறாள் சாவித்ரி. யார் கண்ணுக்கும் தெரியாத தான், ஒரு மானிட பெண்ணின் கண்ணுக்கு தெரிவதை கண்டு ஆச்சரியப்படும் எமன், சாவித்ரியின் பக்தி, கணவர் மீது அவள் கொண்டுள்ள பாசம், அவளின் விரதத்தின் வலிமையை புரிந்து கொண்டு, அவளை வணங்கி, "தாயே, என்னால் எடுத்த உயிரை தர முடியாது" என கூறி விட்டு எமலோகம் நோக்கி செல்கிறார்.


சாவித்ரியும் விடாமல் எமனை பின் தொடர்ந்து செல்கிறாள். தனது கணவரின் உயிரை மீட்டு தரும் படி போராடுகிறாள். இறுதியாக எமலோகத்தின் வாசல் வரை சென்று விட்டாள் சாவித்ரி. அப்போது அவளை தடுத்த எமன், "அம்மா, மனித உடலுடன் உயிருடன் இருக்கும் யாரும் இதுவரை வந்தது கிடையாது. நீ வந்துள்ளாய் என்றால் இதிலிருந்தே உனது பத்தினி தன்மை மற்றும் பக்தியின் வலிமை எனக்கு புரிகிறது. அதை நான் வணங்குகிறேன். இதற்கு மேல் நீ வர முடியாது. உன் கணவரின் உயிரை தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்" என வாக்குறுதி அளிக்கிறார்.


சாவித்ரியும் தனக்கு இரண்டு வரங்கள் வேண்டும் என கேட்கிறாள். தருவதாக எமனும் வாக்குறுதி அளிக்கிறாள். முதல் வரமாக தாங்கள் இழந்த ராஜ்யம், மாமனார் - மாமியாரின் பார்வை உள்ளிட்ட அனைத்தையும் கேட்கிறாள். இரண்டு வரமாக, நான் தீவிர பதிவிரதை. அதனால் எனக்க சந்தான பாக்கியம் தர வேண்டும் என கேட்கிறாள். எமலோகத்திற்குள் செல்லும் அவசரத்தில், "சரி தந்தேன்" என சொல்லி விட்டு, எமலோகத்திற்குள் செல்ல முயல்கிறாள்.


இப்போது எமனை தடுத்து நிறுத்திய சாவித்ரி, "இரண்டு வரங்கள் தருவதாக கூறி விட்டு, பாதி வரத்தை மட்டும் தந்து செல்வது எம தர்மனாகி தங்களுக்கு சரியானதா?" என கேட்கிறாள். 


இப்போது தான் சாவித்ரி கேட்ட இரண்டாவது வரத்தை பற்றிய யோசனையும், தான் தருவதாக வாக்களித்ததும் எமனுக்கு நினைவிற்கு வருகிறது. கணவரின் உயிரை திரும்ப தர வேண்டும் என்பதை புத்திசாலி தனமாக, குழந்தை பாக்கியம் என சாவித்ரி கேட்டதை நினைத்து ஆச்சரியத்தில் தடுமாறி போகிறார் எமன். அப்போது அவர்களுக்கு காட்சி அளித்த சிவ பெருமானும், பராசக்தியும், சாவித்ரி தனது கணவர் மீது கொண்ட பக்தியை, கெளரி விரதத்தின் மகிமையையும் அனைவருக்கும் புரிய வைப்பதற்காகவே இது நடந்தது எனக் கூறி சத்தியவானின் உயிரை திரும்ப கொடுத்தருகிறார்கள்.


எமனுடன் போராடி தனது கணவரின் உயிரை சாவித்ரி மீட்டு வந்த நாளே காரடையான் நோன்பாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தின் கடைசி நாளும், பங்குனி மாதத்தின்  துவக்க நாளும் இணையும் நாளே காரடையான் நோன்பாகும். இந்த ஆண்டு காரடையான் நோன்பு மார்ச் 15 ம் தேதி புதன்கிழமை வருகிறது. இந்த நாளில் அன்னை காமாட்சிக்கு கார அடை, இனிப்பு அடை, உருகாத வெண்ணெய் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். 


தாலி சரடு மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள் காலை 06.31 மணி முதல் 06.47 மணிக்கு தாலி சரடினை மாற்றிக் கொள்ளலாம். மற்றவர்கள் நோன்பு கயிறினை பூஜையில் வைத்து வழிபட்ட பிறகு திருமணமான பெண்களாக இருந்தால் கணவரிடம் ஆசிர்வாதம் பெற்று, அவரின் கைகளால் கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். திருமணமாகாத பெண்களும், கணவர் வெளியூர் சென்றிருப்பவர்களும் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெற்று கழுத்திலோ அல்லது கைகளிலோ கட்டிக் கொள்ளலாம்.