சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. ஹரியானாவில் கடும் இழுபறி.. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

Manjula Devi
Oct 08, 2024,10:49 AM IST

சண்டிகர்/ஸ்ரீநகர்:   ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் திடீர் திருப்பமாக ஹரியானாவில் கடும் இழுபறி நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.


இந்த இரு மாநிலங்களிலும் பல்வேறு கட்டமாக தேர்தல் நடந்தது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.  ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதேபோல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட நிலையில் அங்குள்ள 90 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. 


அரசியல் சட்டம் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தலாகும். இதில் பாஜக 89 தொகுதிகளிலும் , இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் 89 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதேபோல் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி சுயேட்சையாகவும் போட்டியிட்டன. இந்த நிலையில் ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 




ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை


ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாடு கட்சி கூட்டணி கிட்டத்தட்ட 50 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தனித்துப் போட்டியிட்ட மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 24 இடங்களில் மட்டுமே கைப்பற்றியுள்ளது. மற்றவர்கள் 10 இடங்களில் முன்னணியில் உள்ளனர்.


ஹரியானாவில் இழுபறி


அரியானாவில் மொத்தம் 90 இடங்களில் ஆரம்பத்தில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 71 இடங்களில்  முன்னிலை வகித்து வந்தனர். ஆனால் தற்போது திடீர் திருப்பமாக அது தலைகீழாக மாறி விட்டது. காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களிலும், பாஜக கூட்டணி 46 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.


அதேசமயம், பாஜக வேட்பாளர்கள் பல தொகுதிகளில் மிகவும் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில்தான் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதால் முடிவு பெரும் சஸ்பென்ஸாக மாறியுள்ளது.


தொங்கு சட்டப் பேரவை அமையும் என கூறப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வருகிறது, காங்கிரஸ் கூட்டணி எளிதாக வெல்லும் என்று கணிக்கப்பட்ட ஹரியானாவில் இழுபறி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்